மீனவர் பிரச்சனை மோசமடைய ஜெயலலிதா காரணம் : இலங்கை அமைச்சர்

rajithaஇலங்கை- இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சனை மோசமடைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மைய காலங்களில் முன்னெடுத்திருந்த சில தீர்மானங்கள் தான் காரணம் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்திய மீனவர்கள் உற்சாகமடைந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் மட்டும், இலங்கைக் கடற்படையின் கண்காணிப்பின்படி, 43 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்திருப்பதாகவும் மீன்பிடித்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘அவர் தான் இந்தப் பிரச்சனைக்கு கடந்த காலங்களில் அடித்தளமிட்டார். அவர் எடுத்திருந்த சில தீரமானங்கள் காரணமாகத் தான் இந்தப் பிரச்சனை மோசமடைந்திருக்கிறது. இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க போகவேண்டாம், அது சட்டவிரோத நடவடிக்கை என்று நாங்கள் எங்கள் மீனவர்களுக்கு கூறியிருக்கிறோம். ஆனால் அப்படியான அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து வந்திருக்கவில்லை’ என்றார் ராஜித்த சேனாரத்ன.

‘தமிழக முதல்வர் ஒரு பக்கத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுகிறார். ஆனால் மற்ற பக்கத்தில் அவர்களின் மனித உரிமைகளை மீறுவோருக்காகவும் அவர் குரல்கொடுக்கிறார். அதனால் தான் அந்த மீனவர்கள் இலங்கை கடல்பரப்புக்குள் வருவதற்கு உற்சாகம் பெறுகின்றனர்’ என்றார் இலங்கை அமைச்சர்.

ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்தத் தயார்

 

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறார்

 

தமிழக முதல்வர் அழைப்பு விடுத்தால், மீனவர் பிரச்சனை தொடர்பில் தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்-வாரத்தில் இந்தியா செல்கிறார்.

‘ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் அத்துமீறி வடக்கு இலங்கைக் கடல்பரப்புக்குள் நுழைகின்றமை பற்றியும் தங்கள் நாட்டு மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்படுகின்றமை தொடர்பிலும்’ தனது பயணத்தின்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் இருநாட்டு அரசுகளும் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

இறுதியாக, 2008-ம் ஆண்டில் கூட்டு செயற்குழு அமைக்க எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, 2012-ம் ஆண்டு ஜனவரியில் இலங்கை நடத்திய கூட்டுச் சந்திப்பின் பின்னர் இந்தியா தனது கூட்டத்தை இதுவரை நடத்தவில்லை என்றும் ராஜித்த சேனாரத்ன கூறினார்.

இலங்கை மீனவர்களும் 220 பேர்வரையில், பெரும்பாலும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள், இந்தியச் சிறைகளில் இருப்பதாக இலங்கை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பதிகாரி அன்டணி ஜேசுதாசன் தமிழோசையிடம் கூறினார். -BBC

TAGS: