புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

ilayaraajaஇசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய இளையராஜா, மருத்துவர்களின் ஆலோசனையின்படி கட்டாய ஓய்வில் இருந்தார்.

இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சியில் இளையராஜாவால் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், ரசிகர்களை ஏமாற்றாமல் வீடியோ கான்பரன்ஸில் தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சியிலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார்.

தற்போது முழுவதுமாகக் குணமடைந்துள்ள இளையராஜா, மீண்டும் தன் இசைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கவிஞர் சினேகன் நடிக்கும் ‘இராஜராஜ சோழனின் போர்வாள்’ படத்திற்காக ஒரு பாடலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரசாத் ஸ்டுடியோவில் கம்போஸ் செய்துள்ளார். இன்று, அந்தப் பாடலுக்கான குரல்பதிவு செய்யும் பணியையும் தொடர்கிறார்.

இசைஞானி உடல்நலம் பெற்றுத் திரும்பியதும் பதிவுசெய்யும் முதல் பாடல் என்பதாலும், 2014ஆம் ஆண்டு அவரால் பதிவுசெய்யப்படும் முதல் பாடல் என்பதாலும், ‘இராஜராஜ சோழனின் போர்வாள்’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.