ஹரியாணா முதல்வரை அறைந்த இளைஞர்

harayana_cmதிறந்தவெளி ஜீப்பில் சென்று கொண்டிருந்த ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை அறைந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் மத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பானிபட் மாவட்டத்துக்கு ஹூடா ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசுவதற்காக திறந்த வெளி ஜீப்பில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, பார்வையாளர்கள் பகுதியில் நின்றிருந்த இளைஞர், தடுப்பு வளையத்தை மீறி ஹூடாவை அறைந்துள்ளார்.

முதல்வரை அறைந்த இளைஞரின் பெயர் கமல் முஹிஜா என்று தெரிய வந்தது.

“மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு, இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2010-ம் ஆண்டில், அரசு தனக்கு வேலை அளிக்கவில்லை என்ற காரணத்துக்காக இளைஞர் ஒருவர், ஹூடா மீது ஷூ வீசியது நினைவுகூரத்தக்கது.

TAGS: