ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

jaya_ministryராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும், ஆயுள் தண்டனை பெற்றுள்ள 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக  அமைச்சரவையில் இன்று முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு; தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும்; எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433என்-ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

உச்ச நீ மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், இது குறித்து உடனடியாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விரிவான விவாதத்திற்குப் பின், இன்று, 19.2.2014, காலை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில்  சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்  நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இருப்பினும், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.  எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி,  ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

TAGS: