இறந்த சாமியார் உயிரோடு வருவார்: சிஷ்யகோடிகள் உடலை அடக்கம் செய்ய மறுப்பு

ashutosh_maharajஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சாமியார் ஒருவர் மாரடைப்பால் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி இறந்து விட்டார். இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அதிகாரிகள் சாமியார் காலமாகிவிட்டார் என அதிகாரப்பூர்வமாக கூறினாலும், சாமியார் உச்சகட்ட தியானத்தில் இருக்கிறார், அவரும் இறக்கவில்லை என்று கூறி அவருடைய சிஷ்யகோடிகள் உடலை அடக்கம் செய்ய விடாமல் மல்லுகட்டியுள்ளனர்.

அதை விட சாமியாரை ஃப்ரீசர் பாக்ஸ் எனப்படும் குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டனர். சாமியார் ஃப்ரீசர் பாக்ஸில் ஆழ்ந்த தியானத்தில் இருந்து விட்டு உயிரோடு வெளியே வருவார் என்று வேறு கூறி சிஷ்யகோடிகள் களேபரம் செய்து வந்துள்ளனர்.

இறந்து போன சாமியாரின் பெயர் அஷுடோஷ் மஹராஜ், இவர் திவ்ய ஜோதி ஜாக்ரதி சன்ஸ்தான், அதாவது ஆன்மிக ஓளி எழுச்சி அமைப்பு என்னும் அமைப்பை நடத்தி வந்துள்ளார்.

சாமியார் இறந்து விட்டதாக கூறி ஒரு வாரக் காலம் ஆன பிறகும், அந்த உடலை அப்படியே போட்டு விட்டு சாமியார் எழுந்து உட்கார்ந்து விடுவார் என்று ஒரு வாரகாலமாக அவரது சிஷ்யகோடிகள் பார்த்துள்ளனர்.

ஆனால் சாமியாரின் சொத்தை கபளீகரம் செய்யவே இப்படி சாமியாரின் உடலை வைத்து கொண்டு இவர்கள் எல்லோரும் நாடகம் ஆடுகிறார்கள் என்று வேறு ஒரு சிஷ்யர் நீதிமன்றம் சென்றுள்ளார்.

இந்நிலையில், சாமியாரின் உடல் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பித்து விட்டதால், சிஷ்யகோடிகள் எவ்வளவு கலாட்டா செய்தாலும் பரவாயில்லை என்று கூறி சுமார் 450 பொலிஸார் அவரது ஆன்மிக மையத்திற்குள் உட்புகுந்து அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்று விட்டனர். -BBC

TAGS: