காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் மீது போர் தொடுத்துள்ளது

congress_logoஜெனிவா தீர்மானத்தின்போது தமிழகத்தின் உணர்வுகளைப் புறக்கணித்து, சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதன்மூலம், காங்கிரஸ் கட்சி தமிழகத்துடன் முழுமையான போர் ஒன்றைத் தொடுத்துள்ளது.

சிங்கள ஆட்சியாளர்களுக்கு நிகரான ஆக்கிரமிப்பு ஆட்சியொன்றை தமிழகத்தில் நடாத்தும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டதன் காரணமாகவே, திராவிடக் கட்சியான தி.மு.க. தமிழகத்தின் இனமான உணர்வைத் தட்டி எழுப்பி, தமிழகத்தின் ஆட்சியைத் தனதாக்கியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வரானார்.

அன்றுமுதல், காங்கிரஸ் கட்சி தமிழகத்தைத் தன் எதிரியாகவே பாவித்தது. ஆனாலும், தமிழகத்தில் தன் பிடி முற்றாகத் தளர்ந்துவிடக் கூடாது என்ற சிந்தனையில், நாவில் சிறிது தேனைத் தடவிக்கொண்டது. தமிழகத்தை வீழ்த்தி, அதன்மீது தன் ஆட்சியை மீண்டும் அமைக்கும் நம்பிக்கையுடன் செயற்பட்டது. அவர்களது, அந்த நம்பிக்கைக்கு நாள் குறிக்கப்பட்டது போலவே, தமிழக முதல்வரான பேரறிஞர் அவர்கள் புற்றுநோய்க்கு உள்ளாகி, 1969 பெப்ரவரி 03-ம் நாள் மரணமடைந்தார்.

அதுவே, தமிழினத்தின் வீழ்ச்சிக்கான முதல் நாளாகவும் அமைந்தது. அண்ணா அவர்கள் அமர்ந்த பதவி அவருக்கு மட்டுமே என்ற முழக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கலைஞர் கருணாநிதி அவர்கள், அதன் தலைவராகத் தன்னை நிறுத்திக் கொண்டார்.

காலங்கள் உலகின் எல்லா இனங்களிலும் மாற்றங்களையும், ஏற்றங்களையும், ஆற்றல்களையும் வளர்த்துச் செல்ல, தமிழினம் மட்டும் வீழ்ச்சினை நோக்கியே சாய்ந்து சென்றது. தமிழகத்தின் ஆட்சியைத் தனதாக்கிய கலைஞர் கருணாநிதி அவர்கள், அதன் பலன்களையும் தனக்கு மட்டுமே ஆக்கிக்கொண்டார். தமிழகம் பெற்ற வளர்ச்சி அத்தனையும் கலைஞரது குடும்பத்தினரை மட்டுமே வளப்படுத்தியது. கலைஞரது பேராசை, கழகத்தை நிலைகுலைய வைத்தது. கழகத்தின் கணக்கைக் கேட்ட காரணத்தால், திராவிட இயக்கத்தின் முக்கிய தூணாக விழங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களைக் கழகத்திலிருந்தே வெளியேற்றினார். கலைஞர் கருணாநிதி.

தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, அதன்மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். திராவிட இயக்கத்தின் பிளவை இந்திய காங்கிரஸ் கட்சி புத்திசாலித்தனமாகக் கையாண்டது. அன்றிலிருந்து இரண்டில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி அமர்ந்துகொண்டு தனது சவாரியைத் தொடர்ந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளது எதிர்நிலைச் செயற்பாடுகள் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. பலவீனமான காங்கிரஸ் கட்சியின் சிறிய வீத வாக்கு வங்கி திராவிடக் கட்சி ஒன்றினது வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கணிக்கப்பட்டது.

தமிழக அரசியல் கட்சிகளின் எலி, பூனை அரசியலில் பருத்த இலாபத்தை காங்கிரஸ் கட்சியே அனுபவித்தது. அதனால், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ் மக்கள் மீதான கொஞ்ச நஞ்ச அக்கறையும் இல்லாமல் போய்விட்டது. தன் விருப்பப்படி, தன்னைச் சுமந்து செல்லும் திராவிடக் கட்சியை வருடிக் கொடுத்தபடியே, தமிழ் மக்களுக்கு குழி பறிக்க ஆரம்பித்தது.

தமிழகத்திலிருந்து பிரித்தானியர் காலத்தில் கொண்டு செல்லப்பட்ட மலையகத் தமிழர்கள் விடயமாக இருக்கட்டும், தமிழக மீனவர்கள் பிரச்சினையாக இருக்கட்டும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு எதிரான நிலையையே எடுத்திருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னரான 67 வருட காலத்தில், இந்திய வம்சாவழித் தமிழர்களான மலையகத் தமிழர் வாழ்வின் அவலங்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் என்றுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை. சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், சிறை பிடிக்கப்பட்ட போதும் காங்கிரஸ் ஆட்சி அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் கண்டுகொள்ளாமலே கைவிட்டது.

இதற்கும் மேலாக, ஈழத் தமிழர்களது இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, தமிழ் இளைஞர்களைச் சூடேற்றி, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கிய காங்கிரஸ் ஆட்சியாளர்கள், தமிழீழத்தை நோக்கிய அவர்களது போராட்டத்தைக் காரணம் காட்டி, சிங்கள ஆட்சியாளாகளுடன் சமரசம் செய்துகொண்டு, அமைதிப் படை என்ற பெயரால் அனுப்பப்பட்ட இந்தியப் படைகள் மூலம், இரக்கமே இன்றிப் போர் தொடுத்து தமிழீழத்தையே சுடுகாடாக்கியது. பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். பல நூறு தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படனர். பெண்கள்மீதான பாலியல் வன்புணர்வைப் போராயுதமாக இலங்கைத் தீவில் அறிமுகப்படுத்திய கொடுமைக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்களே காரணமாக இருந்தனர்.

ஈழ மண்ணில் இந்தியப் படைகள் நடாத்திய வெறியாட்டமே, ராஜீவ் காந்தியின் மரணத்திற்கும் காரணமாகியது என்பதை இந்திய உச்ச நீதிமன்றமே ஒப்புக்கொண்ட பின்னரும், ராஜீவ் காந்தி என்ற பக்குவமற்ற மனிதனின் மனித வேட்டையைக் கணக்கிலெடுக்காது, அத்தனை கொடூரங்களையும் சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து நடாத்தி, ஈழத் தமிழினத்தின்மீது ஒரு இனப் படுகொலையை நீதியற்று நிறைவேற்றியது.

அதன் பின்னரும், அடங்காத இரத்தப் பசியுடன் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்தின் உணர்வெழுச்சியையும் கருத்தில் கொள்ளாமல், சிங்கள ஆட்சியாளர்களைக் காப்பாற்றும் கொடும் செயலைத் தொடர்ந்தும் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தின் எழுச்சி காரணமாகத் தனது சிறுபான்மை ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்ற காரணத்தால், கடந்த இரண்டு தடவைகள், நீர்த்துப் போகச் செய்யப்பட்ட தீர்மானத்திற்கு காங்கிரஸ் அரசு ஆதரவு வழங்கியது.

காங்கிரஸ் கட்சியின் தமிழின விரோதச் செயற்பாட்டைப் புரிந்து கொண்ட தமிழக மக்கள், காங்கிரஸ் கட்சியை வேரோடு சாய்க்கத் தீவிரமாகச் செயற்பட்டார்கள். இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அநாதாரவானது. அப்போதும், நிதானத்திற்கு வராத காங்கிரஸ் கட்சி, இந்தத் தடவை ஜெனிவா மனித உரிமைகள் மையத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே செயற்பட்டது. அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப்போக வைப்பதற்காகப் பாக்கிஸ்தானுடன் இணைந்து பெரும் பாடுபட்டது. ஆனாலும், அமெரிக்கத் தீர்மானம் வெற்றி பெற்றது.

இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களது தமிழின அழிப்பில் பங்கேற்றதுடன், சர்வதேச மையமொன்றில், தமிழகத்தின் இன உணர்வையும், விருப்பங்களையும் மீறி சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதை உலகம் கவலையுடன் நோக்குகின்றது. இதனை, ‘இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழகத்தின்மீது முழுமையான போர் ஒன்றை ஆரம்பித்துவிட்டார்கள்’ என்று மேற்குலக ஊடகவியலாளர் ஒருவர் வர்ணித்திருந்தார்.

ஈழத் தமிழினத்தின் மீது இன அழிப்பு குற்றத்தைப் புரிந்த காங்கிரஸ் கட்சி, இப்போது தன்னை வீழ்த்தக் கங்களம் கட்டிநிற்கும் தமிழகத்தை வெறுப்புடன் நோக்குகின்றது. ஆம், காங்கிரஸ் கட்சி தமிழகத்துடன் முழுமையான போர் ஒன்றைத் தொடுத்துள்ளது.

– கரிகாலன்

TAGS: