திருவள்ளுவரை (திருக்குறள்) அவமதிப்பதா? மான் கராத்தேவுக்கு கண்டனம்!

தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”மான் கராத்தே என்ற படத்தில் தேவையில்லாமல் திருக்குறளை புகுத்தி நையாண்டி செய்துள்ளனர். கதாநாயகியை திருமணம் செய்ய வேண்டுமெனில் பத்து திருக்குறள் தெரிந்திருக்க வேண்டுமாம். திருக்குறள் போட்டியில் கலந்து கொள்ளும் ஒருவர் கீழ்க்கண்ட வாறு திருக்குறள் சொல்கிறார்…

“ஆட்டலில் சிறந்த ஆட்டல் மாவாட்டல்,

அவ்வாட்டல் ஓட்டலில் ஆட்டப்படும் ”.

இப்படி யாரவது திருக்குறள் சொல்வார்களா ? இது திருக்குறளை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் அல்லவா ? இப்படியான காட்சிக்கு கண்டனம் தெரிவிக்காமல் நம் தமிழ் சமூகம் திரையரங்கில் சிரித்துக் கொண்டு வெளியே வருவது வேதனையளிக்கிறது.

திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் , காமத்துப்பால் என மூன்று வகைப்படும் என்று ஒருவர் சொல்கிறார் . உடனே நாயகன் ”அப்ப அந்த அமலாப்பால் ?” என்று நையாண்டி செய்கிறார். அருகில் உள்ள பெண் ஒருவர் காமத்துப்பால் என்றால் என்ன என்று கேட்கையில் அது ஆண் பால் + பெண்பால் கூட கொஞ்சம் பாதாம் பால் . அது தான் காமத்துப்பால் என்று விடை தருகிறார் இன்னொருவர். உலகிற்கு முப்பால் கொடுத்த திருக்குறளையும் , திருவள்ளுவரையும் இத்தகைய கீழ்த்தரமான நகைச்சுவை அவமானப்படுத்துவதாக உள்ளது .

அதன் பின்பு நாயகன் திருக்குறளின் முதல் பாடலை சொல்கிறார் . “அகர முதல எழுத்தெல்லாம் ‘குமரன் சன் ஆப் மகாலட்சுமி’யே உலகு” என்று சொல்லி அடுத்த திருக்குறள் நகைச்சுவையை அள்ளி வீசுகிறார் . கதாநாயகியின் வீட்டில் எழுதி உள்ள திருக்குறளை அப்படியே பார்த்து படிக்கிறார் நாயகன். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து ஒரு குறளைக் கூட படித்தது இல்லையாம் . இது எப்படி ஒரு ஏமாற்று வேலை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்பட இயக்குனர்களே ! உங்களுக்கு நகைச்சுவை நையாண்டி செய்வதற்கு வேறு எதுவுமே கிடைக்கவில்லையா ? தமிழர்களின் புனித நூலான திருக்குறள் தான் கிடைத்ததா ? இதுவே இஸ்லாமிய மக்களின் நூலையோ , இந்துக்களின் நூலையோ கேவலப்படுத்தி இருந்தால் அவர்கள் சும்மா விடுவார்களா ? தமிழர்கள் மட்டும் என்ன அவமானப்படுத்தினாலும் எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியம் தானே உங்களுக்கு !!

இனி தமிழர்கள் நீங்கள் செய்யும் நகைச்சுவைக்கு சிரித்து விட்டு போய் விடமாட்டார்கள் . மானமுள்ள தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் . இப்படியாக தமிழர்களின் பண்பாட்டை , தனித்துவத்தை , அடையாளங்களை இழிவு செய்து படமெடுத்தால் தமிழர்கள் நாங்கள் உங்கள் படங்களை திரையரங்கில் ஓட விடமாட்டோம் என எச்சரிக்கிறோம். மான் கராத்தே படத்தில் திட்டமிட்டு திருக்குறளை அவமானப்படுத்திய இயக்குனரை தமிழர் பண்பாட்டு நடுவம் வன்மையாக கண்டிக்கிறது . இதற்கு அந்த இயக்குனர் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழர்களின் சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.