ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனு

manchuviradduபுதுடில்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி, வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது. போட்டிகளின்போது, காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால், இந்த போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி, விலங்குகள் நல உரிமை அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்து, சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிராக, தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில், நேற்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதில், ‘ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒழுங்குமுறைகளை உருவாக்கி, அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உத்தரவிட வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: