மீண்டும் நாயகனாகும் அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி நாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, பம்பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெரிய அளவில் அப்போது பேசப்பட்டவர். ரஜினிக்கு தம்பியாக தளபதி படத்தில் நடித்தார். திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு கடல் படத்தின் மூலம் மறுபடியும் நடிக்க வந்தார்.

ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த திருப்பத்தை ஏற்படுத்தவில்லை. அதனால சில நாட்கள் சைலன்டாக இருந்த அரவிந்த்சாமி தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுவும் நாயகனாக. ‘புதையல்’ படத்தின் இயக்குனர் செல்வா, அரவிந்த் சாமியிடம் ஒரு கதை சொல்ல, அது அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே அந்தக் கதையில் நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

இப்படத்தில் அரவிந்த்சாமி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம். மேலும் இந்தப் படத்திற்காக ஜிம்மிற்கு சென்று உடம்பை முறுக்கேற்றி வைத்திருக்கிறார். படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.