சூர்யாவும் பின்னணி பாடகரானார்! அப்படின்னா அஜீத் மட்டும்தான் பாக்கி!!

surya-Aபாடகர்-பாடகிகளின் வயிற்றெரிச்சலை நடிகர்-நடிகைகள் கொட்டிக்கொள்ளும் காலமிது. முன்பெல்லாம் சங்கீதம் தெரிந்த இவர்கள்தான் பின்னணி பாட வேண்டும் என்றொரு நிலை இருந்தது. ஆனால், சமீபகாலமாக அந்த நிலை மாறிக்கொண்டு வருகிறது. முக்கியமாக மொழி தெரியாத வட இந்திய பாடகர்-பாடகிகள் தமிழ் சினிமாவில் பாடத் தொடங்கிய பிறகு இங்குள்ள பாடகர்-பாடகிகளுக்கான மரியாதை குறைந்து வந்தது.

இந்த நிலையில், கமல், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் பாடிய பாடல்கள் ஹிட்டானதை அடுத்து இப்போது வடஇந்திய பாடகர்களுக்கு இருந்த மரியாதையும் குறைந்து விட்டது. நடிகர்-நடிகைகள் பாடினால்தான் பாடல்கள் ஹிட்டாகும் என்று நினைத்து இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களை நடிகர்களை பாட வைப்பதில் முன்னுரிமை கொடுக்கின்றனர்.
அந்த பட்டியலில், தற்போது அஞ்சான் படத்துக்காக யுவனின் இசையில் ஒரு பாடல் பாடி சூர்யாவும் இணைந்துள்ளார். ஏற்கனவே ஒரு விளம்பர படத்தில் மட்டுமே பாடி அனுபவம் பெற்ற சூர்யா, இந்த பாடலின் டியூனை கேட்ட சிறிது நேரத்திலேயே ஹம் பண்ணி பாடத் தொடங்கி விட்டாராம். அதோடு, அதிக டேக் வாங்காமல் 2 மணி நேரத்திற்குள் ஒரு பாடலை பாடி முடித்து கைதட்டல் பெற்றாராம்.
ஆக, தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை பெரும்பாலான முன்னணி நடிகர்கள் மற்றும் ஸ்ருதிஹாசன், ரம்யா நம்பீசன், லட்சுமிமேனன் போன்ற நடிகைகளும் பின்னணி பாடி வரும் நிலையில், அஜீத் மட்டுமே இன்னும் பின்னணி பாடகர் பட்டியலில் சேராமல் இருக்கிறார். அவரும் கூடிய சீக்கிரமே பின்னணி பாடுவார் என்று நம்புவோம்.