வறுமைக் கோடு என்பதை விட சாகாக் கோடு என்பதே சரி

இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக இந்தியாவின் வறுமை அளவுகோல் சம்பந்தமாக ஆராய்ந்த அரசாங்கத்தின் நிபுணர் குழுவிருடைய பரிந்துரை காட்டுகிறது.

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு இந்தியாவில் வறுமைக் கோட்டின் அளவை மீண்டும் வரையறுத்துள்ளது.

கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.32க்கு குறைவான செலவுசெய்யும் திறனும் நகர்ப்புறங்களில் ரூ.47க்கு குறைவான செலவுத் திறனும் இருப்பவர்களே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களாக கருதப்படுவர் என்பதாக இந்த நிபுணர் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது.

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம்இந்தியா பொருளாதார வளர்ச்சி கண்டுவந்தாலும், அங்கு ஏழைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் மிக அதிகமாகவே உள்ளது.

 

2011-12 ஆம் ஆண்டு சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான குழு கிராமப்புறங்களில் ரூ.27 என்றும் நகர்ப்புறங்களில் ரூ.33 என்றும் பரிந்துரைத்திருந்த அளவு பெரும் விவாதங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்திருந்த சூழ்நிலையில், ரங்கராஜன் தலைமையில் இந்த அளவுகளை மீள்பரிசீலனை செய்ய அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

தற்போதைய வரையறையின் கீழ் பார்க்கையில், இந்தியாவில் முப்பத்து ஆறு கோடிப் பேருக்கும் அதிகமானோர் அதாவது நாட்டின் ஜனத்தொகையில் 29.5 சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக ஆகிறது.

ஆனாலும் 2009-10 ஆண்டில் செய்யப்பட்ட மதிப்பீட்டில் இந்தியாவில் 38.2 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்திருந்தனர்.

இந்தியாவில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசாங்கம் தனது முதல் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவுள்ள நிலையில் வறுமைக் கோட்டின் புதிய அளவுகள் சர்ச்சையை தோற்றுவிக்கும் என்று கருதப்படுகிறது.

வறுமையை வரையறுக்கும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை யதார்த்தத்துக்கு பொருத்தமில்லாத அர்த்தமற்ற காரியமாக இருக்கிறது என பிபிசி தமிழோசையிடம் பேசிய இடதுசாரி பொருளியல் வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார்.

“வறுமைக் கோடு என்பதை விட சாகாக் கோடு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பணம் இருந்தால் சாகாமல் இருக்கலாமே ஒழிய, அதை வைத்து வாழ முடியாது” என்று அவர் குறிப்பிட்டார். -BBC

TAGS: