அரண்மனை படத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தணிக்கைக்குழு!

aranmanai-copy-350x189வினய், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லக்ஷ்மிராய், சந்தானம் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் -‘அரண்மனை’. தொடர்ந்து காமெடிப்படங்களை எடுத்து காமெடி ஸ்பெஷலிஸ்ட்டாக பெயர் வாங்கிய சுந்தர்.சி முதல்முறையாக ‘ஹாரர்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

அரண்மனை ஹாரர் படமாக இருந்தாலும் சுந்தர்.சியின் வழக்கமான காமெடிகளும் இப்படத்தில் இருக்குமாம். தெய்வசக்தி நிறைந்த பெண்ணாக ஹன்சிகா இப்படத்தில் நடித்திருக்கிறாராம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் அவருக்கு இருக்குமாம். இப்படத்தில் முக்கிய வேடமொன்றிலும் சுந்தர்.சி நடித்திருக்கிறார்.

வரும் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் அரண்மனை படத்தை அண்மையில் தணிக்கைக்குழுவினர் பார்த்தனர். படத்தில் வன்முறை, ஆபாசம் இல்லை என்பதால் அரண்மனை படத்துக்கு தணிக்கைக்குழுவினர் யு சான்றிதழ் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் அரண்மனை படத்தில் பயமுறுத்தும் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருப்பதால் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். குழந்தைகளுடன் பெரியவர்களும் அமர்ந்து பார்க்கும் படம் என்ற அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

யு/ஏ சான்றிதழ் கொடுத்தால் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது. எனவே அரண்மனை படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கவலையில் இருக்கிறார்கள்.