ஜெயலலிதா உயிருக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலா?

jaya2ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மாநிலத்தில் அளிக்க உத்தரவிட வேண்டுமென்று வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவிடம் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் என். ராஜாராமன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், தமிழக முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வரும் 27-ம் திகதி அளிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான ஜெயலலிதா, தமிழக முதல்வராக உள்ளதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

மேலும், காவிரி நதி நீர்ப் பிரச்னையில் அவரது முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதால் அவர் மீது கர்நாடக மாநில மக்கள் மத்தியில் அதிருப்தியும், வெறுப்பும் உள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தாலும் அச்சுறுத்தல் உள்ளது.

எனவே, முதல்வர் ஜெயலலிதாவின் விலைமதிக்க முடியாத உயிர் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த வழக்கின் தீர்ப்பை கர்நாடகா தவிர்த்த வேறு மாநிலங்களில் அளிக்க உத்தரவிட பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், இதை பெற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, அந்த மனுவை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் ரவீந்திரா மைதானிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

TAGS: