முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 100 கோடி ரூபா அபராதம்! 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது!

jayalalitha2தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக இந்திய தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மற்றைய குற்றவாளிகளான ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த அபராதம்  குறித்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படவில்லை எனவும் குறித்த தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என, இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா இந்த தீர்ப்பை வாசித்தார்.

10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது!

நான்காண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன் படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார்.

இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம்.

எனவே ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதலையான பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஒரு சட்டசபை அல்லது மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். எனவே 6 ஆண்டு போட்டியிட முடியாது என்றால் இரு பொதுத் தேர்தல்களில் குற்றவாளியால் போட்டியிட முடியாது என்றே அர்த்தம்.

எனவே ஜெயலலிதாவின் தண்டனை காலத்தை தவிர்த்து இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தாலும் கூட இன்னும் 2 சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாது.

ஜெயலலிதா குற்றவாளி: பதவி விலக்குமாறு அறிக்கைகள்! பற்றி எரிகிறது தமிழகம்! பதற்ற நிலை தொடர்கிறது!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.

ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அதிமுகவினர் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

சிறிய அளவில் உள்ள காவலர்களும் அதிமுகவினரின் இந்தச் செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கோவையில் அவினாசி சாலையில் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு சில கார்களின் கண்ணாடியை உடைத்து வாகனங்களை சேதப்படுத்தியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மதுரையில் பதற்றம் கூடுதலாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுகவினர் கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டு வன்முறை செய்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள கடைகள் மூடப்பட்டுவிட்டன. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு வருகின்றன. தெற்கு மாவட்டங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் சென்னைக்கு வரும் வோல்வோ பேருந்துகளை ரத்து செய்துள்ளது.

மேலும் சில தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதோடு சாலையில் பேரூந்துகள் எரிக்கப்பட்டு கடைகளும் எரிக்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா பதவி விலக வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

ஜெயலலிதா பதவி விலக வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அவர் குற்றவாளியென்று தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின் அடிப்படையிலும், சட்டப்படியும் செல்வி ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக வேண்டும். பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை, லஞ்சம் ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பு ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுசேர்க்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருதுகிறது.

இத்தீர்ப்பையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள், பொதுச்சொத்துக்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாநில காவல்துறை சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதியை பாதுகாக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா பதவி இழப்பு! அடுத்த முதலமைச்சர் யார்?

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், அடுத்த முதலமைச்சராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும், அதுகுறித்த விவாதமும் தற்போது தீவிரமடைந்துள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது எம்.எல்.ஏ. பதவி தானாகவே தகுதி இழப்பாகிவிடும் என்பதால் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்துள்ளார்.

கடந்த முறை ஜெயலலிதா, இதேப்போன்று நீதிமன்ற தீர்ப்பால் முதலமைச்சர் பதவி இழந்தபோது அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக அப்போது நியமிக்கப்பட்டார்.

ஆனால் இந்த முறை அவருக்கு அந்த வாய்ப்பு மிகக்குறைவுதான் என்று கூறப்படுகிறது. வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன. மேலும் விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயரும் அடிபடுகிறது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா: கண்ணீர் விட்டழுத அதிகமுவினர்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா இன்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா இந்த தீர்ப்பினை அறிவித்தார்.

அதனையடுத்து, மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் பொலிஸார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.

இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அதிமுகவினர் கண்ணீர் விட்டு அழுதனர்.

சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து வரவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி பிணை பெறும் வரை இந்த சிறையில் தான் ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சுப்பிரமணியம் சாமி போட்ட முடிச்சு.. சிக்கிக் கொண்ட ஜெயலலிதா…!

கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக கருதலாம். அவரது இந்த பெரும் தோல்விக்கு முக்கியக் காரணம், சுப்பிரமணியம் சாமிதான். காரணம்,

இவர்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவி்ப்பு வழக்கை முதலில் தொடர்ந்தவர் ஆவார்.

இந்திய அரசியலில் மிகவும் வித்தியாசமான, வில்லங்கமான ஒரு அரசியல்வாதி சாமி. இவர் ஆக்கப்பூர்வமான செயல்களை விட பலரைப் பாதிக்கும் வகையிலான அரசியலைத்தான் இவர் பெரும்பாலும் நடத்தி வந்திருக்கிறார்.

அத்தி பூத்தாற் போல இவரால் சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன – முல்லைப் பெரியாறு அணை வழக்கை உதாரணமாகச் சொல்லலாம்.

நிச்சயம் சாமியை யாருமே குறைத்து எடை போட முடியாது. காரணம், இவர் போட்ட வழக்குளில் பெரும்பாலானவற்றில் இவருக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான் யார் மீதாவது இவர் வழக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் பீதியடைந்து போகிறார்கள்.

யாருக்கு எப்படியோ ஆனால் ஜெயலிதாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியவர் சாமிதான்.

கிட்டத்தட்ட தமிழக அரசியல்வாதிகள் அத்தனை பேருக்குமே இவர் சிம்ம சொப்பனாக திகழ்ந்து வருகிறார். திமுக தொடங்கி அதிமுக வரை யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 1996ம் ஆண்டு திமுக அரசுதான் போட்டது என்றாலும் கூட அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் இந்த சாமிதான்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவரது சொத்து குவிப்பு தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் கோப்புகளாக்கி அப்போதைய ஆளுநரிடம் வழங்கி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரியிருந்தார் சாமி.

உண்மையில் சாமி சேர்த்துக் கொடுத்த அத்தனை ஆதாரங்களுமே வலுவானவை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் பின்னர் வந்த திமுக அரசு வழக்கைப் போட்டது. அந்த வகையில் சாமிக்குத்தான் திமுக நன்றி சொல்ல வேண்டும். அவர் சேகரித்து வைத்திருந்த அத்தனை ஆதாரங்களுமே ஜெயலலிதா வழக்கை மேலும் சிக்கலாக்கி விட்டது என்பதே உண்மை.

உண்மையில் ஜெயலலிதா மீதான பிற வழக்குகளை திமுக அரசுதான் போட்டது. அதை சாமி போடவில்லை. எனவே அந்த வழக்குகளில் ஜெயலலிதா எளிதாக வந்து விட்டார். ஆனால் சாமி போட்ட முடிச்சை அவிழ்க்கத்தான் அவரால் முடியாமல் போய் விட்டது.

ஒரு காலத்தில் ஜெயலலிதா மீது நட்பாகத்தான் இருந்தார் சாமி. ஜெயலலிதாவும் கூட திமுகவுக்கு எதிராக சாமியைத்தான் பயன்படுத்தி வந்தார்.

ஆனால் பின்னர் திடீரென எதிரியாகி விட்டனர் இருவரும். டான்சி ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மூலம் அனுமதி வாங்கிய சாமியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். அதுதான் சாமிக்கும் பெரிய ஹைலைட்டான அரசியல் வெற்றியாகும்.

ஆனால் அதன் பின்னர் அதே வேகத்தில் பல்டி அடித்து மீண்டும் ஜெயலலிதாவுடன் நட்பானார் சாமி. அதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் தூதராகவும் மாறினார் சாமி. வாஜ்பாய் அரசில் ஜெயலலிதா இணைய சாமிதான் முக்கியக் காரணமும் கூட.

தனக்கு எதிராக செயல்பட்டவர் என்பதையும் பாராமல், சாமியின் பிறந்த நாளன்று அவரது கட்சி அலுவலகத்துக்கே நேரில் போய் வாழ்த்தியவர் ஜெயலலிதா. சாமிக்கு போர்ட் ஐகான் காரைப் பரிசாகவும் கொடுத்தார்.

அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் சாமியை நிறுத்தி வெற்றி பெறவும் வைத்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் போயஸ் தோட்டத்தின் ராஜகுரு என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தவர் சாமி. உண்மையில் சாமியை அரசியல் ரீதியாக வளர்த்து விட்டவர் ஜெயலலிதா என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் வாஜ்பாய் ஆட்சியை மிகக் குறுகிய காலத்தில் கவிழ்த்த ஜெயலலிதா மீது கோபம் கொண்டார் சாமி. மீண்டும் இருவரும் எலியும் புலியுமாக மாறினர்.

ஜெயலலிதாவுக்கு எதிராக அதன் பின்னர் தீவிரமாக செயல்பட்ட சாமியை, அதிமுகவினர் போகும் இடமெல்லாம் தூற்றி தாக்க முற்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த சாமியை, அதிமுக மகளிர் அணியினர் புடவையைத் தூக்கி கொடுத்த வரவேற்பு அப்போது அந்த இடத்தில் இருந்தவர்களால் இன்றைக்கும் மறக்க முடியாது.

இந்த வழக்கு குறித்து தீர்ப்புக்கு முன்பு ஏஎன்ஐக்கு சாமி அளித்த பேட்டியில்,

இந்த வழக்கிலிருந்து நிச்சயம் ஜெயலலிதா தப்ப முடியாது. காரணம், இதில் வலுவான ஆதாரங்கள் உள்ளன.

முதல்வர் ஜெயலலிதா தவறு செய்திருப்பது உண்மை. இந்த வழக்கில் எல்லாமே தெளிவாக உள்ளன. எதையும் மூடி மறைக்க முடியாது. அவரால் இனியும் யாரையும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார் சாமி.

மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த சாமி காரணமாகி விட்டார்.

தமிழகத்திற்கு தலைகுனிவு: ஜெயலலிதாவின் தீர்ப்பு குறித்து விஜயகாந்த் அறிக்கை

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியில் இருக்கும் போதே தண்டிக்கப்பட்டதால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அதோடு மிகப்பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் ஆக  வேண்டும், தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்ற இயற்கையின் நியதியை யாராலும் மாற்ற முடியாது.

இதற்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவும் விதி விலக்கல்ல. சுமார் 18 வருடங்கள் நடைபெற்ற இ,ந்த வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்து, ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியில் இருக்கும் போதே தண்டிக்கப்பட்டதால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அதோடு மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

1991 96 ஆகிய ஐந்து ஆண்டுகளுக்கு 60 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது எப்படி என்பதுதான் வழக்கு. வழக்கு தொடரப்பட்ட 1997ம் ஆண்டில் இருந்து இன்று வரை இந்த ஒரு வழக்கிற்காக மட்டும் மக்கள் வரிப்பணம் சுமார் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி பல்வேறு காரணங்களை விதவிதமாக சொல்லி இந்த வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி தடுத்து நிறுத்திட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது.

இந்த வழக்கிற்காக இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் ஆஜரானார்கள். ஆனால் இதை எல்லாம் முறியடித்து இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவித்த பிறகும் கூட விடுதலைப் புலிகளாலும், காவிரி நதி பிரச்சினையாலும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி, வேறு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் அந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு தேதியையே ஒருவார காலம் தள்ளி வைத்து, ஜெயலலிதா கேட்ட நீதிமன்றத்திற்கே வழக்கை மாற்றியது.

மேலும் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு இல்லை என்று தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், காவல்துறையை தலைமை தாங்கும் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்பதை நம்பமுடியவில்லை என்று அவர் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மேயர்கள், நகராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிமுகவின் நிர்வாகிகள் என அனைவரும் ஒட்டு மொத்தமாக பெங்களுரில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது.

இதுபோன்ற நிகழ்வுகள் வரவேற்கத்தக்கதல்ல. பெங்களுரில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேறுவழியின்றி காவல்துறையினர் தடிஅடி நடத்தியுள்ளனர். கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என்றும் நான்கு ஆண்டு சிறை தண்டனையோடு, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அதிமுகவினர் அராஜகத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைகள், தொழில் நிறுவனங்களை மூடச்சொல்லி அடித்து நொறுக்குவதும், பஸ்களை தீ வைத்து எரிப்பதும், சாலைகளில் செல்கின்ற பஸ், லாரி, கார் போன்ற வாகனங்களை கல்வீசி தாக்குவதும், சாலை மறியல் செய்வதும் என வன்முறையில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவங்கள் நடைபெறும் பொழுது காவல்துறையினர், கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். ஆளும் கட்சியினரே வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளதால் மத்திய அரசின் பாதுகாப்பு படையின் மூலம் தமிழகத்திற்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழக காவல்துறை இதுபோன்ற வன்முறை சம்பவங்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்கி தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது தரப்பட்டுள்ள இந்த தீர்ப்பு தவறு செய்பவர்களுக்கு பாடமாக இருக்கும். ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கிறது என ஆட்டம் போடும் ஆட்சியாளர்கள் இதை பார்த்த பிறகாவது திருத்திட வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்காக ஆட்சி செய்யவேண்டும் மாறாக லஞ்சம், ஊழல், முறைகேடு, அராஜகம் என செய்து ஆட்சி நடத்தினால் தண்டனை நிச்சயம் என்பதை இத்தீர்ப்பு நிரூபித்துள்ளது.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

TAGS: