இந்தியாவில் தாக்குதல் நடத்த அல்-காய்தா, ஐ.எம். சதி: “ரா’ உளவுப் பிரிவு எச்சரிக்கை

அல்-காய்தா, ஐ.எம் (ஐந்தியன் முஜாஹிதீன்) ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி செய்வதாக மத்திய அரசை வெளிநாட்டு உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் “ரா’ உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களில் மத்திய உளவுத் துறைதான் (ஐ.பி.) மத்திய உள்துறைக்கு வழக்கமாக இத்தகைய எச்சரிக்கையை அனுப்பும். ஆனால், இந்த முறை, பாகிஸ்தானில் இருந்து கிடைத்த நம்பகமான தகவலையடுத்து, இந்த எச்சரிக்கையை மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கும், மத்திய உள்துறைக்கும் “ரா’ அமைப்பு வியாழக்கிழமை நேரடியாக அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட உள்ளுறைக் குறிப்பு தொடர்பான விவரத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் “ரா’ உளவுப் பிரிவின் செயலர் அலோக் ஜோஷி வியாழக்கிழமை விளக்கியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சிஐஏ எச்சரிக்கை: இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பில் சேரும் ஆர்வமுள்ள பாகிஸ்தான், காஷ்மீர் இளைஞர்களுக்கு அல்-காய்தா, இந்தியன் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் ஆயுதப் பயிற்சி, உளவியல் பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அண்மையில் கூறியது.

இதனைத் தொடர்ந்து, இரு பயங்கரவாத அமைப்புகளுக்கு இடையே நடைபெற்ற மின்னஞ்சல் தொடர்புகளை இந்திய உளவு அமைப்பான “ரா’ பிரிவு இடைமறித்தபோது இது தெரியவந்தது. இது குறித்து அந்தத் துறையின் உயரதிகாரி கூறியதாவது:

“”இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத் தலைவர் ரியாஸ் பட்கல் தனது இயக்கத்தின் ஆதரவாளர்களுக்கு முக்கிய கட்டளை பிறப்பித்துள்ளார். அதில், “அல்-காய்தா அமைப்புடன் நேரடியாக நாம் தொடர்பில் இருப்பதற்கான பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இரு தரப்பும் சேர்ந்து ஐ.எஸ். அமைப்புக்கு உதவியாக இருப்பதுடன், நமது இயக்கத்தை விரிவுபடுத்தும் வகையிலும் தாக்குதல் நடத்த வேண்டும்.

இதில் பாகிஸ்தான் உளவு ஏஜெண்டுகளை ஈடுபடுத்தக் கூடாது. இந்தப் பணிகளை தன்னிச்சையாக செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்ஐஏ இயக்குநர் கவலை: இது தொடர்பான தகவலைத் திரட்ட “ரா’ பிரிவுக்கு சிஐஏ அமைப்பு உதவியதாகவும் இந்திய உளவுப் பிரிவு உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய என்ஐஏ (தேசியப் புலனாய்வு அமைப்பு) தலைமை இயக்குநர் சரத் குமார் கூறியதாவது: “வாகா எல்லைச் சாவடி அருகே பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு அல்-காய்தா, இந்தியன் முஜாஹிதீன் போன்றவை ஆதரவளித்ததாக இந்தியா சந்தேகிக்கிறது. இந்த நிலையில், “ரா’ உளவுப் பிரிவு எச்சரிக்கைக்கு முன்பாகவே இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்து கொண்ட உளவுத் தகவலில் ஐ.எஸ். அமைப்புக்கும் அல்-காய்தா, இந்தியன் முஜாஹிதீனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தொடர்புகள் மிகவும் கவலை அளிக்கக் கூடிய எச்சரிக்கையாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் தற்போது வந்துள்ள “ரா’ எச்சரிக்கை குறிப்பு முக்கியத்துவம் பெறுகிறது’ என்றார்.

பயங்கரவாத உதவியாளர்கள் முடக்கம்

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் திடீர் தாக்குதல்களை செயல்படுத்தும் ரகசிய உதவியாளர்கள் (ஸ்லீப்பர் செல்கள்) முடக்கப்பட்டுவிட்டதாக மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் மத்திய உளவுத்துறை (ஐ.பி.) உயரதிகாரி தெரிவித்தார்.

“ரா’ உளவுப் பிரிவு எச்சரிக்கை குறித்து அவர் கூறியதாவது: இந்தியன் முஜாஹிதீன்களின் “ஸ்லீப்பர் செல்கள்’ எனப்படும் ரகசிய பயங்கரவாத உதவியாளர்களில் பலர், ஏற்கெனவே இந்திய ராணுவத்தாலும், தேசியப் புலனாய்வு அமைப்பாலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அந்த இயக்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு நாசவேலையில் ஈடுபடுவதற்காக வந்துகொண்டிருந்த நிதி முடக்கப்பட்டது. இந்த நிலையில்தான், அண்மையில் அல்-காய்தாவின் தலைவர் அல்-ஜவாஹிரி மூலம் சமூக ஊடகங்கள் வழியாக ஒரு விடியோவை அந்த இயக்கத்தினர் ஒளிபரப்பச் செய்தனர். அதில், நம் நாட்டில் கிளையை நிறுவியதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பின்னணியில் அண்மையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ், ஹால்டியா துறைமுக வளாகத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, நிதி வசதி இல்லாத காரணத்தால் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, கையெறி குண்டு வீச்சு போன்ற செயல்களில் ஈடுபட பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அல்-காய்தா, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள் பயிற்சி அளித்து வருகின்றன. குளிர்காலத்தைப் பயன்படுத்தி அவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்கும் சதியிலும் அவை ஈடுபட்டு வருகின்றன. எனவே, நம் நாடு மிகவும் கனமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளது என்றார்.http://www.dinamani.com/india

TAGS: