ஹிந்தி திரைப்படத்தில் ரஜினிகாந்த் பெயர், வசனங்களைப் பயன்படுத்த நிரந்தரத் தடை

நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், வசனங்களை “மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் பயன்படுத்துவதற்கு நிரந்தரத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக நடிகர் ரனிஜிகாந்த் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

மும்பையைச் சேர்ந்த வர்ஷா புரொடக்ஷன் என்ற நிறுவனம் “மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் ஹிந்தி மொழியில் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. அந்தத் திரைப்படம் விரைவில் திரையிடப்பட உள்ளதாகவும், அதில், என் பெயர், புகைப்படம், நான் வசனம் பேசும் விதம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள், விடியோ, இணையதளம் வழியில் வெளிவந்துள்ளன. மேலும், என் பெயரைப் பயன்படுத்தி ஒழுங்கீனமற்ற முறையில் பல காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. எனது பெயர், புகைப்படம், வசனம் பேசும் விதம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் என்னிடம் அனுமதி பெறவில்லை.

இதன் மூலம், உலகம் முழுவதும், இந்திய சினிமா துறையில் எனக்கு உள்ள மரியாதை, நற்பெயர் அனைத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என் பெயரை வைத்து முற்றிலும் எனக்கு முரணாக ஒரு படத்தை வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது.

எனவே, “மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற திரைப்படத்தில் எனது பெயர், புகைப்படம், வசனம் பேசும் விதம், சித்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த அந்த நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீது நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களது பெயரை யாராவது பயன்படுத்தினால் அதற்குத் தடை பெறுவதற்கு அந்தப் பிரபலத்துக்கு உரிமை உள்ளது. இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால், மனுதாரரின் பெயர், வசனம் ஆகியவற்றை திரைப்படத்தில் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு உத்தரவிடப்பட்டது சரியானதுதான். அதனால், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்.

-http://www.dinamani.com