மூன்றாவது வெற்றிக்காக காத்திருக்கும் ராஜ்கிரண்!

‘கழுகு’ படத்தை தொடர்ந்து சத்யசிவா இரண்டாவதாக இயக்கும் திரைப்படம் ‘சிவப்பு’.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும்நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். நாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமையா, செல்வா, போஸ் வெங்கட், ஏ.வெங்கடேஷ், அல்வா வாசு, பூ ராம் ஆகியோரும் நடித்துள்ளனர். மது அம்பாட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜ்கிரண், ‘மஞ்சப்பை’, ‘கொம்பன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவப்பு படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம். தற்போது, படத்தின் பிரச்னைகள் அனைத்தும் முடிவடைந்து சிவப்பு படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இப்படத்தை சமீபத்தில் பார்த்த தேசிகன் என்பவர், ராஜ்கிரண் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு, படத்தை முழுவதுமாக வாங்கி தானே வெளியிட விருப்பம் தெரிவித்தாராம்.

அதன்படி, படத்தை வாங்கியுள்ள தேசிகன் விரைவில் ‘சிவப்பை’ உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்போகிறார். ’மஞ்சப்பை’, ‘கொம்பன்’ என்று தொடர் வெற்றிகளை குவித்து வரும் ராஜ்கிரண் சிவப்பு திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். ஆக, சிவப்புக்கு பச்சை கொடி காட்டியாச்சு.

-http://www.dinamani.com