இந்தியாவில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தயாரிக்கும் நிறுவனமான நெஸ்லே இந்தியா ஐம்பது மில்லியன் டாலர்கள் மதிப்பிலான, உடனடியாக சமைத்து சாப்பிடக் கூடிய நூடுல்ஸ்களை அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

அண்மையில் மேகி நூடுல்ஸ் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயமும், மோனோ சோடியம் க்ளூட்டமேட்டும் இருப்பது கண்டறியப்பட்டன என இந்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே அந்த உணவு பாதுகாப்பற்றது மற்றும் அபாயகரமானது என்றும் அந்த அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்தக் கண்டுபிடிப்புகளை நெஸ்லே இந்தியா மறுத்துள்ளது மட்டுமன்றி, அவை பாதுகாப்பானவை என தமது ஆய்வுகள் காட்டுகின்றன எனக் கூறுகிறது.
இதனிடையே மேகி மீது மும்பை நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து மேல் முறையீட்டை அந்த நிறுவனம் செய்கிறது. -BBC

























