மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளதாக சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முன்னாள் நண்பரான சோட்டா ராஜன் ஆஸ்திரேலியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இந்தோனேசியா வந்தபோது பாலி நகரில் வைத்து போலிசார் அவரை கைது செய்தனர்.
உடனடியாக இது குறித்து இந்தியாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சி.பி.ஐ. பொலிசார் சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது.
அந்த விசாரணையின் போது தாவூத் இப்ராஹிம் குறித்த பல்வேறு தகவல்களை சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.
தாவூத் இப்ராஹிமுக்கு இருக்கும் சொத்துக்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் தற்போதைய, ஓய்வு பெற்ற மும்பை பொலிஸ் அதிகாரிகள் யார் யார் என்பது போன்ற தகவல்களை கூறியதாக தகவல் வெளியாகியிருந்தன.
மேலும், தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வரும் இடம் பற்றி தகவல் அளித்த அவர், தாவூத்துக்கு பாகிஸ்தான் அரசாங்கம் முழு பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து, தாவூத் இப்ராஹிமை கைது செய்வதற்காக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனினும், தாவூத்தை காப்பாற்றும் முயற்சியில் பாகிஸ்தானும் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கராச்சியில் வசித்து வந்த தாவூத் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அந்த கட்டிடத்தினுள் செல்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் பெறப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.newindianews.com