அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது குவியும் புகார்கள்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

theater-1-600அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் குறித்த புகார்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து வருவதாகக் கூறுகின்றனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.

இதற்காக தனிப்படைகளும் போலீஸ் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தியேட்டர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள், சென்னை காவல் துறையை 044-23452359 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டது. தற்போது அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனவாம்.

பொதுமக்கள் அளிக்கும் புகார்களில் ‘சினிமா தியேட்டர்களில் கட்டண விவரத்தை வெளிப்படையாக எழுதிவைக்க வேண்டும். ஏ.சி. வசதி உள்ள தியேட்டர்களில் கண்டிப்பாக ஏ.சி. பயன்படுத்த வேண்டும். ‘பிளாக்’கில் டிக்கெட் விற்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகளுக்கும் பஞ்சமில்லையாம்.

மேலும் கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக வந்தும் பொதுமக்கள் புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் போலீஸ் சார்பில் இதுதொடர்பான அதிரடி நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.filmibeat.com