புருஷன், பொண்டாட்டி பிரச்சினையை நடிகைகள் அலசுவது நியாயமல்ல.. ஸ்ரீபிரியா பொளேர்!

001தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்றவர்களின் குடும்பப் பிரச்சினையை நடிகைகள் அலசி ஆராய்வது குறித்து நடிகை ஸ்ரீபிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகைகள் அமர்ந்து கொண்டு மற்றவர்களின் குடும்பப் பிரச்சினையை அலசி ஆராய்வது எனக்கு ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை என நடிகை ஸ்ரீபிரியா விமர்சித்துள்ளார்.

80களில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. ரஜினி, கமலுடன் அதிக படங்களில் நடித்த அவர், சின்னத்திரையிலும் விக்ரமாதித்தன், சின்னப்பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட பிரபல தொடர்களிலும் நடித்துள்ளார்.

அதோடு, மாலினி 22 பாளையங்கோட்டை, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், தொலைக்காட்சிகளில் மக்கள் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் நிகழ்ச்சிகளில் நடிகைகள் கலந்து கொண்டு தீர்ப்பு வழங்குவது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் ஸ்ரீபிரியா.

சட்டம், நீதிமன்றம் உள்ளது…

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நீதிமன்றம் உள்ளது. குடும்பப் பிரச்சினைகளுக்கு என பல்வேறு சட்டப்பிரிவுகளும் உள்ளன. அப்படி இருக்கையில் அவர்கள் எதற்காக தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடி சேனல்களுக்கு வர வேண்டும்.

நாட்டாமைகளாகும் நடிகைகள்…

இந்த நிகழ்ச்சிகளுக்கு தீர்ப்பு சொல்வதற்கு நீதிபதி போல் நடிகைகள் பங்கேற்கின்றனர். இதை நாம் நிறுத்தியே ஆக வேண்டும். நீதிபதி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பு என்பது தனிக்கலை. தயவுசெய்து அதனை நாம் முறைப்படி கற்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்…

சமீபகாலமாக இவ்வாறு தொலைக்காட்சியில் மக்கள் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடிகைகள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுவதை வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கிண்டல் செய்கின்றனர். இதற்கு அவர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்.

கீதா, ஊர்வசி…

இதேபோல், தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஓரினச்சேர்க்கையாளர்களை தரக்குறைவாகப் பேசி நடிகை கீதாவும், மலையாளத் தொலைக்காட்சியில் ஆண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி நடிகை ஊர்வசியும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

குஷ்பு…

இது ஒருபுறம் இருக்க, நடிகை குஷ்பு சன் டிவியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், சமீபத்தில் அடிதடியானது தனிக்கதை. இந்த சம்பவங்களை வைத்து தான் நடிகை ஸ்ரீபிரியா இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com