குடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக கொச்சைப்படுத்துவதா? திருமாவளவன் காட்டம்

thirumavalavanசென்னை: குடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக தமிழக அரசு கொச்சைப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 10 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் பருவமழை பொய்த்துப் போய்விட்டது. காவிரியில் நீர் வராமல் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள் பருவமழை பொய்த்துப் போனதால் வாழ்வாதாரத்தை இழந்து மனமுடைந்து போயுள்ளனர்.

வறட்சியால் பயிர்கள் கருகிப்போனதைக் கண்ட அதிர்ச்சியாலும், கடன் சுமையாலும் கடந்த சில மாதங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பிலும், தற்கொலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இன்று (30.12.2016) ஒரே நாளில் மட்டும் ஐந்து விவசாயிகள் மரணம் அடைந்திருப்பது இதயத்தைப் பிளப்பதாயிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அளவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்துவருகிறது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் 68 விவசாயிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டனர் என தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை தெரிவிக்கிறது.

பயிர் பொய்த்துப்போவதும், கடன் சுமையும் தான் விவசாயிகள் தற்கொலைக்கு முதன்மையான காரணம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசோ அதற்குக் காரணம் குடும்பப் பிரச்சனை எனச் சொல்லி விவசாயிகளின் சாவையும் கொச்சைப் படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கவேண்டுமென கடந்த ஒருமாத காலமாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திவருகிறது.

இப்போது தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்துக் கட்சிகளுமே அந்தக் கோரிக்கையை எழுப்பிவருகின்றனர். இனியும் தாமதம் செய்யாமல் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். பயிர் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட, மாரடைப்பில் உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்.

வறட்சியின் காரணமாகவும் மோடி அரசின் செல்லா நோட்டு நடவடிக்கையின் காரணமாகவும் விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். அவர்களுக்கும் உதவும் விதமாக நூறுநாள் வேலையை இந்த ஆண்டு 200 நாட்களாக உயர்த்தி அறிவிக்கவேண்டும் எனத் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: