ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சேலத்தில் போராட்டம் நடத்திய ஜிவி பிரகாஷ்!

gv-prakash-protest

சேலம்: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் சேலம் அருகே தர்ணா போராட்டத்தை இன்று நடத்தினார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். இதற்காக கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலையும் வெளியிட்டிருந்தார்.

அலங்காநல்லூரில் நேற்று நடத்திய இளைஞர்களின் போராட்டத்துக்காக விடிய விடிய சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டினார் ஜிவி பிரகாஷ்குமார். இதனிடையே சேலம் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜிவி பிரகாஷ்குமார் சென்றிருந்தார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சேலத்தில் ஜிவி பிரகாஷ் குமார் தர்ணா போராட்டம் நடத்தினார். அவருடன் நாம் தமிழர் கட்சியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாலையில் போராட்டத்தை முடித்துக் கொண்ட ஜிவி பிரகாஷ், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதலுக்குள்ளாகி வாடிப்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை நேரில் பார்க்க செல்கிறேன் என்றார்.

tamil.oneindia.com