நடிகர் விஜய் மாதிரி மற்ற திரையுலகினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தரணும்! – அய்யாக்கண்ணு

ayyakannu1சென்னை: நடிகர் விஜய் மாதிரியே மற்ற திரையுலகப் பிரமுகர்களும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சிலர் கலந்து கொள்கின்றனர்.

டெல்லிக்கு செல்லும் வழியில் சென்னயில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அய்யாக்கண்ணு.

அவர் கூறுகையில், “தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகச் சொல்கிறாரே தவிர, செய்வதில்லை. நாங்கள் போராடும் இடத்தில் இருந்து எங்களை அப்புறப்படுத்தவே அரசு நினைக்கிறது. செய்ய வேண்டும் என்கிற உறுதி முதல்வரிடம் இல்லை.

எங்களுடைய கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். எங்களுக்கு தெரிந்தது போராட்டம் ஒன்றுதான். பிரதமரும் எங்களைப் பார்க்கமாட்டேன் என்கிறார். தேர்தலுக்கு பிறகு எங்களை அடிமையாகவே பார்க்கிறார்கள்.

வல்லரசாக இருப்பதை விட விவசாயிகளுக்கான நல்லரசாக இருப்பதுதான் இப்போதைய தேவை என நடிகர் விஜய் கூறியது உண்மைதான். அதை வரவேற்கிறோம். அதேபோல் திரையுலகில் இருக்கும் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும். மேலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

tamil.oneindia.com