லடாக்கில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு! கற்கள் வீசி அட்டூழியம்!!

ladakh1ஜம்மு: ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை நமது ராணுவ வீரர்கள் மனித சங்கிலி அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா ராணுவத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த பகுதி பூடானுக்கு சொந்தமானது என்றாலும் அது நமது ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளதால் அந்த பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

எல்லையில் பதற்றம்

இதனால் எல்லையில் 2 மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

லடாக்கில் பிரச்சினை

சுதந்திர தினமான நேற்று ஜம்மு- காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள பாங்கொங் ஏரி வழியாக சீனா ஊடுருவ முயன்றது. இதை கண்ட ராணுவத்தினர் அதை முறியடிக்க திட்டமிட்டனர். பாங்கொங் ஏரி என்பது இந்தியாவையும், சீனாவையும் பிரிக்கும் பகுதியாகும்.

மனித சங்கிலி

நமது வீரர்கள் அனைவரும் கைகளை கோர்த்து கொண்டு மனித சங்கிலி போல் அரண் அமைத்து சீனாவின் ஊடுருவலை முறியடித்தனர். இதனால் சீனா ஆத்திரமடைந்தது.

கற்கள் வீச்சு

அப்போது சீன ராணுவத்தினர் கற்களை வீசி ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்தனர். இறுதியில் சீன ராணுவத்தினர் அனைவரும் விரட்டி அடிக்கப்பட்டனர். எனினும் லடாக் எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

tamil.oneindia.com

TAGS: