முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம்!

புதுடெல்லி,

இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், 3 முறை ‘தலாக்’ கூறும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்ததுடன், இதற்கு தடை விதிக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, வருகிற குளிர்கால கூட்டத்தொடரில், ‘முத்தலாக்’குக்கு தடை விதிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என தகவல்கள் வெளியாகியது.

இப்போது முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டவரைவு தயார் செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. வாய்மொழியாக, எழுத்துப்பூர்வமாக, இ-மெயில் உள்பட தகவல்தொடர்பு உபகரணங்கள் மூலம் உடனடியாக முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது என சட்ட அமைச்சகத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது.

-dailythanthi.com

TAGS: