தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை தராமல் அவமதித்த விஜயேந்திரர்..கொந்தளித்த தமிழ் ஆர்வலர்கள்

சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது தியானத்தில் இருந்தார் விஜயேந்திரர் என சங்கர மடம் விளக்கம் தந்துள்ளது. தேசிய கீதம் பாடும்போதும் தியானத்தில் இருந்தேன் என சொல்லிவிட்டால் சட்டம் அமைதியாக இருந்துவிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழக அரசின் சட்டப்படி தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். இல்லையெனில் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த குற்றமாகும்.

தமிழ்த் தாய் வாழ்த்துக்கும்…

தேசிய கீதத்துக்கு என்ன மரியாதை அளிக்கப்படுகிறோ; தேசிய கீதத்தை அவமதித்தால் என்ன தண்டனை வழங்கப்படுகிறதோ அது தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்திலும் பொருந்தும். இதை அவமதிக்கிற உரிமை எவருக்கும் எதன் பெயரிலும் இல்லை.

அரசை அவமதிப்பது

தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கின்ற போது எதன் பெயராலும் யாருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. தமிழ்த் தாய் வாழ்த்து பாடுகிற போது தியானத்தில் இருந்தேன்; ஜெபம் செய்து கொண்டிருந்தேன்; தொழுகை நடத்திக் கொண்டிருந்தேன் என சொல்லுவது என்பது அரசை அவமதிக்கும் தேசவிரோத குற்றம்.

தமிழக அரசு விரோதம்

எதற்கெடுத்தாலும் ஆண்டி இந்தியன்ஸ், தேசவிரோதிகள் என முத்திரை குத்தும் எச். ராஜாவின் கூட்டத்தில்தான் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிப்பதும் தமிழக அரசு விரோதம் அல்லவா?

சமாளிக்கவே தியானம்

தமிழக ஆளுநரே எழுந்து நின்று மரியாதை செய்திருக்கிறார் என்ற நிலையில் விஜயேந்திரர் எப்படி விதி விலக்காக இருக்க முடியும் என்று தமிழ் உணர்வாளர்கள் கொதித்துப் போயுள்ளனர். ‘தியானத்தின்’ பெயரால் நியாயப்படுத்த முயற்சிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள். இங்கே நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர்; அரசின் தலைவர் முதல்வர்.. அவர்களுக்கே விதி விலக்கு இல்லை.

சட்டத்தை வளைப்பதா?

சட்டத்தின் முன் யாராக இருந்தாலும் குற்றம் என்பது குற்றமே. ஆகையால் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாதது மட்டுமில்லாமல் அதை நியாயப்படுத்து முயன்றுள்ளதும் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அப்படியானால் இஷ்டத்திற்கு சட்டத்தை வளைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேசிய கீதத்திற்கு என்ன மரியாதை உண்டோ, நிச்சயம் அது தமிழ்த் தாய் வாழ்த்துக்கும் உண்டு என்பதே மக்களின் கருத்து,

tamil.oneindia.com

TAGS: