சினிமாவை போன்று அரசியலிலும் ‘என் பாணி வேறு, கமல்ஹாசன் பாணி வேறு’ நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சினிமாவை போன்று அரசியலிலும் எனக்கும், கமல்ஹாசனுக்கும் வெவ்வேறு பாணி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள்

தனது வீட்டுக்கு வந்திருந்த கமல்ஹாசனை வழிஅனுப்பி வைத்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

என் நண்பர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதற் கான அழைப்பிதழை எனக்கு கொடுக்க வந்தார். நான் எனது மனமார்ந்த வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தேன்.

எல்லோருக்கும் தெரியும், நண்பர் கமல்ஹாசன் பெயருக்காகவோ, பணத்துக்காகவோ, பதவிக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், தமிழக மக்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆண்டவனின் நல்ல ஆசீர்வாதம் அவருக்கு கிடைக்கவேண்டும். அதற்காக ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். அவரது எல்லா பயணத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

வெவ்வேறு பாணி

சினிமாவிலேயே என்னுடைய பாணி வேறு, நண்பர் கமல்ஹாசன் பாணி வேறு. அப்படியே அரசியலிலும் என்னுடைய பாணி வேறாக இருக்கும், அவருடைய பாணி வேறாக இருக்கும். ஆனால் மக்களுக்கு நல்லது செய்றது ஒன்று தான் எங்களுடைய முக்கிய நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-dailythanthi.com