தமிழக அரசியல் தலைவர்களை சமாதானம் செய்வோம்.. மேகதாதுவில் அணை கட்டுவோம்.. குமாரசாமி உறுதி

பெங்களூர்: தமிழக அரசியல் தலைவர்களை சமாதானம் செய்து மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்து இருக்கிறார்.

காவிரியில் தற்போது தண்ணீர் வெள்ளமென பொங்கி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பின் காவிரி தண்ணீரால், மேட்டூர் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் சந்தோசமடைந்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவது குறித்து தீவிர ஆலோசனை கர்நாடகாவில் நடந்து வருகிறது. இதற்காக கர்நாடக பட்ஜெட்டில் கூட நிதி ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் பேட்டி அளித்துள்ளார்.

அதில், தமிழக அரசியல் தலைவர்களை சமாதானம் செய்து மேகதாதுவில் அணை கட்டப்படும்.மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. இரு மாநில ஒத்துழைப்புடன் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்.

மேகதாது அணை இரண்டு மாநிலத்திற்கும் பயன் தரும். இதனால் பெங்களூரின் தண்ணீர் தட்டுப்பாடு குறையும். அதேபோல் கடலில் வீணாகும் தண்ணீர் இரண்டு மாநில விவசாயிகளுக்கும் பயன்படும்.

இந்த திட்டம் குறித்து தமிழக அரசியல் தலைவர்களை சந்திக்க இருக்கிறேன். விரைவில் ஒவ்வொரு தலைவராக தனித்தனியாக சந்தித்து, அணை கட்ட ஆலோசனை நடத்துவேன் என்று கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: