4500 வருட பழமையான உடல்.. டிஎன்ஏவில் இருந்த தமிழர் அடையாளம்.. ஹரியானா தொல்பொருள் ஆய்வில் அதிசயம்!

டெல்லி: 4500 வருடங்களுக்கு முன் ஹரியானாவில் வாழ்ந்த மனிதர் ஒருவரின் உடலில் இருந்து டிஎன்ஏ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஎன்ஏ முழுக்க முழுக்க தென்னிந்திய மக்களுக்கு நெருக்கமானதாக உள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் மிகவும் பழமையான நாகரீகங்களில் ஒன்று ஹரப்பா நாகரீகமும் என்று கூறப்படுகிறது. இங்கு இருந்தவர்கள் ஆரியர்களா, திராவிடர்களா என்று விவாதம் பல நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இவர்கள் திராவிடர்கள்தான், தமிழர்கள் போன்ற தென்னிந்திய மக்கள்தான் இங்கு வசித்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆரியர்கள் அதற்கு பின்பே இங்கு குடியேறி இருக்க வாய்ப்புள்ளது என்றும் ஆய்வு மூலம் கூறப்பட்டுள்ளது.

எங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சி

இந்த ஆராய்ச்சி கடந்த 2015ல் ஹரியானா அருகே இருக்கும் ராகிகார்கி என்ற பகுதியில் நடத்தப்பட்டது. டாக்டர். வசந்த் ஷிண்டே என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் தலைமையில் மூன்றுக்கும் அதிகமான வருடங்கள் ஹரியானா பகுதியில் இந்த சோதனை நடந்து இருக்கிறது. அங்கு உள்ள மனித எலும்புகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

எப்படி செய்தனர்

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடுகள் 4500 வருடம் பழமை வாய்ந்தது. இதன் மூலம்தான் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த எலும்புகளின் உட்புறம் உள்ள சிறு சிறு திசுக்களை நவீன தொழில்நுட்பம் மூலம் பிரித்து எடுத்து இருக்கிறார்கள். பின் அந்த திசுக்களின் இருந்து டிஎன்ஏவை எடுத்து உள்ளனர். இதன் மூலமே ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

முதல் விடை

இந்த ஆய்வின் மூலம், ஹரப்பாவில் வாழ்ந்த முதல் மனிதன், ஆரிய இனத்தை சேர்ந்தவர் கிடையாது. இந்த மனிதனின் உடலில் உள்ள டிஎன்ஏ அப்படியே திராவிட இனக்குழுவின் டிஎன்ஏவை ஒத்து இருப்பதாக டாக்டர். வசந்த் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஆரியர்கள் அங்கே இருந்ததற்கான ஆதாரம் துளி கூட இல்லை என்றுள்ளார்.

இரண்டாவது விடை

அதேபோல், இங்கு மத வழிப்பாடுகள் குறைவாக இருந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட எந்த பொருளும் வேத முறைப்படி இல்லை. எந்த இந்து கடவுள் சிலையும், வேத கால பொருட்களோ இல்லை. மேலும் எந்த பொருளிலும் சமஸ்கிருத எழுத்துக்கள் இல்லை என்றும் கூறியுள்ளார் டாக்டர். வசந்த் ஷிண்டே. தென்னிந்திய எழுத்து வடிவமே இருந்துள்ளதாக கூறியுள்ளார்.

மூன்றாவது விடை

அதேபோல் அதில் காணப்படும் ஜீன்கள், தற்போது இந்தியாவில் வசிப்பவர்களிடம் இருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். இதுதான் இதில் மிகவும் சுவாரசியமான பதில் ஆகும். அதாவது அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாரிசுகள் இப்போதும் வாழ்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

நான்காவது விடை

முக்கியமாக தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியாவில் உள்ள மக்களாக அவர்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர். வசந்த் ஷிண்டே கூறியுள்ளார். இதுதான் இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டமாகும். இதுகுறித்த ஆதாரங்களை விரைவில் ஆய்வு கட்டுரையாக பொதுவில் வெளியிட உள்ளார். இந்த மாத இறுதியில் இது இணையத்தில் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என்றுள்ளார்.

பாஜக

அதே சமயம், 2016ல் இந்த ஆய்வை வெளியிட இருந்ததாகவும், ஆனால் மத்திய பாஜக அரசும், தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்பும் இதை வெளியிட விடவில்லை. வேதம் சார்ந்த் கண்டுபிடிப்புகள் இருக்கிறதா என்று அவர்கள் சோதனை நடத்தினார்கள், வரலாற்றில் அவர்களுக்கு விருப்பமான சுவடுகள் இருக்கிறதா என்று சோதனை செய்தனர். இதனால்தான் இந்த முடிவுகளை வெளியிட இவ்வளவு நாட்கள் ஆகியுள்ளது என்றுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: