பாலியல் புகாரில் சிக்கியவர்கள் படங்களில் நடிக்க மறுப்பதா? சத்ருகன் சின்ஹா எதிர்ப்பு

இந்தி டைரக்டர்கள் விகாஷ்பால், சஜித்கான், சுபாஷ் கபூர், முகேஷ் சாப்ரா, சுபாஷ் கை உள்ளிட்ட இயக்குனர்கள் மீ டூ வில் சிக்கி உள்ளனர். எனவே இந்த இயக்குனர்கள் டைரக்டு செய்யும் படங்களில் நடிப்பதில்லை என்று நடிகர்கள் முடிவு செய்துள்ளனர். சுபாஷ் கபூர் இயக்கிய மொகல் படத்தில் இருந்து அமீர்கானும் சஜித்கான் இயக்கிய ஹவுஸ்புல்–4 படத்தில் இருந்து அக்‌ஷய்குமாரும் விலகி விட்டனர்.

சஜித்கான் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கும்வரை அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அக்‌ஷய்குமார் கூறியுள்ளார். பாலியல் புகாரில் சிக்கிய மற்ற இயக்குனர்கள் படங்களும் முடங்கி உள்ளன. இதுகுறித்து நடிகர் சத்ருகன் சின்ஹா கூறியதாவது:–

‘‘பாலியல் புகாரில் சிக்கிய டைரக்டர்கள் படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர்கள் கூறுவது முறையல்ல. விளம்பரத்துக்காக இப்படி செய்கிறார்கள். நான் அந்த டைரக்டர்கள் படங்களில் நடிப்பேன். பாலியல் புகாரில் சிக்கிய சுபாஷ் கை படத்தில் நான் நடித்து வருகிறேன். அவர்கள் மீது குற்றம்தான் சாட்டி உள்ளனர். குற்றவாளிகள் என்று நிரூபிக்கவில்லை.

குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள். அதன்பிறகும் அவர்களுடன் வேலை செய்வதில் தவறு இல்லை. நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வெளியே வந்தார். இப்போது அவர் சினிமாவில் நடிக்கிறார்.’’

இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறினார்.

-dailythanthi.com