ஓய்ந்த மோடி அலை.. அமைதியான அமித் ஷா.. அதிர்ச்சியில் ஆதித்யநாத்.. கலக்கத்தில் பாஜக!

டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் ஒன்றில் கூட பாஜக வெற்றிபெறும் நிலையில் இல்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என்று அதிகம் எதிர்பார்த்த மாநிலங்களில் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றுள்ளது.

அதேபோல் மிசோரம், சட்டீஸ்கர், தெலுங்கானாவில் தோல்வியை சந்திக்கிறது. இது பாஜகவிற்கும் அதன் தொண்டர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

தந்திரம்

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் அரசியல் ராஜதந்திரம் இந்தமுறை எடுபடவில்லை என்றுதான் கூற வேண்டும். ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பணியாற்ற பாஜக சார்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவர் நிர்வாகிகளை அனுப்பி இருந்தார். ஆனால் எந்த விதமான பயனும், திட்டமிடலும் பாஜகவிற்கு எங்குமே உதவவில்லை. இதுவரை நடந்த தேர்தலில் இருந்து அளித்த ஷா ”டச்” இப்போது மிஸ்ஸாகி உள்ளது.

யோகி பிரச்சாரம்

அதேபோல்தான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தால் அங்கு பாஜக வெற்றிபெறுவது எப்போது உறுதியாக நடக்கும். ஆனால் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் யோகியின் பிரச்சாரம் எடுபடவில்லை. முக்கியமாக அவர் எந்த தொகுதிகளில் எல்லாம் பிரச்சாரம் செய்தாரோ அந்த தொகுதிகளில் எல்லாம் பாஜக தோல்வி அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடஇந்திய மாநிலங்களில் கூட யோகியின் பிரச்சாரம் எடுபடவில்லை.

மோடி அலை

2014ல் வீச தொடங்கிய பிரதமர் மோடியின் அலை, பல தேர்தல்கள், பல விமர்சனங்களை கடந்து தற்போது ஓய்ந்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். முக்கியமாக மோடி அலை ஓய்ந்துவிட்டது என்று அவர் செய்த தேர்தல் பிரச்சாரங்களிலேயே தெரிந்தது. பழையபடி மோடியால் பிரச்சாரம் மூலம் மக்களை கவர முடியவில்லை. மோடியின் பிரச்சாரத்திற்கு இந்த முறை குறைவாகவே கூட்டம் கூடியதாக ஏற்கனவே தகவல்கள் வந்தது. இது தற்போது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்து இருக்கிறது.

என்ன காரணம்

பாஜக இந்த மாபெரும் தோல்வியை சந்தித்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

  1. மாநில சுயாட்சியை மதிக்காதது.

  2. தொடர் மத கலவரம், பிரிவினை, சாதி பிரச்சனை, பசுக் கொலை கலவரம்.

  3. டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி உள்ளிட்ட மக்களை நேரடியாக பாதித்த திட்டங்கள்.

  4. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது.

5.முக்கியமான விஷயங்களில் பிரதமர் மோடி குரல் கொடுக்காதது.

இரட்டையர்

இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் மோடி – அமித் ஷா கூட்டணி எப்போதுமே வெற்றிக் கூட்டணிதான் என்று பெயர் பெற்று இருந்தது. ஆனால் இந்த வெற்றிக்கூட்டணி தற்போது தோல்வியை தழுவி இருக்கிறது. ஆனால் இது சாதாரண தோல்வி கிடையாது, பாஜகவின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்க்கும் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: