ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்

புதுடில்லி: ம.பி., காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று திடீர் திருப்பமாக சந்தித்து பேசி உள்ளார். இது காங்., மேலிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்., ஆட்சி நடக்கும் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள் என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுனர்.

இன்றைய நிலவரப்படி மொத்தம் 24 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. கமல்நாத் மற்றும் டில்லி மூத்த நிர்வாகிகள் நடத்திய பேச்சிலும் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் இன்று டில்லி சென்றார். பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடன் இருந்தார். இன்னும் சற்று நேரத்தில் காங்கிரசில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பான்மை எவ்வளவு ?

மத்தியபிரதேசத்தை பொறுத்தவரை மொத்தம் 230 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். 116 பேர் பெரும்பான்மை இருந்தால் ஆட்சி அமைக்க முடியும். தற்போது ஆளும் காங்., கட்சியில் 114 எம்எல்ஏ.,க்கள் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சியினர் 2 பேர் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.

பா.ஜ.,வில் 107 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். தற்போது அதிருப்தியில் உள்ள 24 பேர் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்தால் இங்கு பா.ஜ., ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் குழப்பங்கள் முடிவுக்கு வரும்.

இதற்கிடையில் முதல்வர் கமல்நாத் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

காங்., கட்சியில் இருந்து சிந்தியா விலகல்

ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசில் இருந்து விலகுவதாக தனது கடிதத்தை காங்., சோனியாவுக்கு அனுப்பி உள்ளார். இந்த கடிததத்தில் அவர் கூறியிருப்பதாவது: 18 ஆண்டுகாலம் இருந்த காங்., கட்சியில் இருந்து வெளியேறும் நேரம் வந்து விட்டது. மக்களின் சேவையாற்ற விரும்பினேன் .ஆனால் இது காங்., கட்சியில் செய்ய முடியவில்லை. மக்கள், தொண்டர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக எனது புதிய பயணத்தை துவக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ம.பி.,யில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., சதி செய்து வருவதாக காங்., மூத்த நிர்வாகி திக்விஜயசிங் குற்றம்சாட்டி உள்ளார்.

dinamalar