கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் இபிஎஸ்

சென்னை: கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம் என முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அங்கு தயார் செய்யப்பட்ட இட்லியை சாப்பிட்டு பார்த்தார்.

இதன் பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறுகையில், ஏழை, எளிய மக்களுக்காக அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களால் பாராட்டப்பட்ட, இந்த திட்டம் மக்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. பல மாநிலங்களும் அமல்படுத்தியுள்ளன.

ஒரு ரூபாய்க்கு இட்லி கிடைப்பது தமிழகத்தில் மட்டும் தான். இ.எம்ஐ., தள்ளி வைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இது மத்திய அரசின் பிரச்னை என்பதால், நிதியமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்

உலகையே உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் 199 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், கொரோனா வைரஸ் பல மாநிலங்களில் பரவியுள்ளது. தமிழகத்தில் பரவியுள்ளது. நேற்று (மார்ச்31) வரை 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டில்லியில் நடந்த முஸ்லீம் மாநாட்டில், பங்கேற்ற 500க்கும் மேற்பட்டோர் கண்டறியப்படடு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர்களின் முகவரி கிடைக்கவில்லை. கொரோனாவால் என்ன விளைவு ஏற்படும் என சுகாதார செயலர் விளக்கியுள்ளார்.

இந்த நோயின் தாக்கத்தை அறிந்து, அவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தகவல் தெரிவித்தால், சிகிச்சை அளிக்கப்படும். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை அளித்தால், குணமாக முடியும்.

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட வேண்டும். தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கை வசதி உள்ள மருத்தவமனை ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் தான் கொரோனாவை தடுக்க முடியும். கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் நோயை தடுக்கத்தான் சட்டம் போடப்பட்டுள்ளது. அதனை மக்கள் மதித்து நடக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஆயிரம் நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் தடுக்க முடியாது. ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம், கொரோனாவின் தாக்கம் பற்றி அறியாமல் மக்கள் வெளியில் வருகின்றனர். ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar