அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை சப்ளை செய்ய இந்தியா முடிவு

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி: கொரோனா வைரசால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ராக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது. இதனால், அமெரிக்கா ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே ஆர்டர் செய்த ஹைட்ராகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என்று டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.

malaimalar