கொரோனா நிவாரண நிதிக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்- மத்திய வருவாய்த் துறை அறிவிப்பு

மத்திய தலைமைச் செயலகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு, வருவாய்த்துறை ஊழியர்களிடம் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிஎம் கேர்ஸ் பண்ட் என்ற பெயரில் தனி நிதியம் உருவாக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டு வருகிறது. தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சாமானிய மக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதி, ஊதியம் உள்ளிட்டவற்றை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம், ஓர் ஆண்டுக்கு வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

2021 மார்ச் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும், இதில் ஊழியர்கள் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், வருகிற 20ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்றும் வருவாய்த்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

malaimalar