24 மணி நேரத்தில் 3525 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 74 ஆயிரத்தை கடந்தது

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2415 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 74,281  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3525 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 24427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 921 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் இதுவரை 8903 பேருக்கும், தமிழகத்தில் 8718 பேருக்கும், டெல்லியில் 7639 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3986 பேருக்கும், ராஜஸ்தானில் 4126 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3664 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

malaimalar