தங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்

கேரள முதல்வரின் முதன்மை செயலாளர் சிவசங்கர்

கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது அரசியலில் புயலை கிளப்பி உள்ள நிலையில், முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு விமானத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக முன்னாள் அதிகாரியும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஆபரேசனல் மேஜேனருமான ஸ்வப்னா சுரேஷ் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார்.

ஸ்வப்னா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஸ்வப்னாவை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சிவசங்கர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. தங்கம் பிடிக்கப்பட்ட நேரத்தில் தலைமை செயலகத்திலிருந்து ஸ்வப்னாவை தப்ப வைக்க சிலர் முயற்சி செய்ததாகவும், முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கம் கடத்தலுக்கும் என்ன தொடர்பு? என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார். ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக அவர் நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் முதன்மைச் செயலாளராக மீர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

malaimalar