லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கின- பதற்றத்தை தணிக்க நடவடிக்கை

லடாக்

இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மோதல் நடைபெற்ற லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின் வாங்கின. அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை தகராறு இருந்து வருகிறது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே கைகலப்பு நடந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ந் தேதி சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சிலர் காயம் அடைந்தார்கள். சீன தரப்பில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி ஆனார்கள்.

இதைத்தொடர்ந்து, எல்லையில் சீனா கூடுதல் படைகளை குவித்தது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் படைபலத்தை அதிகரித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதனால் ராணுவ தளபதி நரவானே சமீபத்தில் லடாக் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்தார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை லடாக் சென்று எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலவரம் பற்றி தரைப்படை, விமானப்படை, இந்திய-திபெத்திய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே எல்லையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையே கடந்த ஜூன் 30-ந் தேதி நடைபெற்ற 3-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது, மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என்றும், எல்லையில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள முன்னுரிமை அளிப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சீனாவுடனான எல்லை பிரச்சினையை கவனிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், இதேபோல் எல்லை பிரச்சினையை கையாள சீன தரப்பில் நியமிக்கப்பட்டு இருக்கும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி வாங் யியும் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் சுமார் 2 மணி நேரம் பேசினார்கள்.

அப்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து ஒற்றுமையின் வழிகாட்டுதல்படி எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது என்றும், அந்த வகையில் எல்லையில் பதற்றத்தை தணிக்க இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஒளிமறைவற்ற முறையில் நடைபெற்றது. முழுமையாக கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை துரிதப்படுத்தி விரைவில் முடிப்பது என்று அப்போது இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்திய-சீன எல்லையில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ விரைவில் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதை இரு தரப்பும் உறுதி செய்வது அவசியம் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டது. அத்துடன், எல்லையில் அமைதியை குலைக்கும் வரையில் யாரும் தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், ஏற்கனவே உள்ள நிலையில் எந்த மாற்றமும் செய்ய முயற்சிக்கக்கூடாது என்றும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மதித்து நடக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

எதிர்காலத்தில் எல்லையில் எந்த சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க இரு தரப்பும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

படைவிலக்கல் முழுமை அடையும் வரையில் இரு தரப்பு சிறப்பு பிரதிநிதிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் வழிகாட்டு நடைமுறைகளின்படி எல்லையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படுவதற்கு எல்லையில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவது அவசியம் என்பதால் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாற இரு தரப்பும் அனுமதிக்கக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் இருந்து நேற்று படைகளை விலக்கும் நடவடிக்கையை சீன ராணுவம் தொடங்கியது.

கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடைபெற்ற ‘ரோந்து பாயிண்ட் 14, 15 மற்றும் 16’, ‘கோங்ரா ஹாட் ஸ்பிரிங்’ பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முன்னணி நிலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த சீன வீரர்கள் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். தாங்கள் அமைத்து இருந்த கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்களையும் அவர்கள் பிரித்து எடுத்துச் சென்றனர்.

இதனால், லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த பதற்ற நிலை முடிவுக்கு வருகிறது.

சீன படை விலக்கல் பற்றி பீஜிங் நகரில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவோ லிஜியானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முன்னணி நிலையில் உள்ள படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் சீனாவைப் போல் இந்தியாவும் படைகளை விலக்கிக் கொள்ளும் என நம்புவதாகவும், எல்லையில் பதற்றம் ஏற்படுவதை தடுக்க ராணுவ மற்றும் தூதரக மட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.

malaimalar