8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் மருத்துவ கல்லூரிகள் இன்று திறப்பு

கர்நாடகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு மருத்துவ கல்லூரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு,  கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கடந்த மாதம் (நவம்பர்) 17-ந் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகளோ, மருத்துவ கல்லூரிகளோ திறக்க அரசு அனுமதி அளிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், டிசம்பர் 1-ந் தேதியில் இருந்து (அதாவது இன்று) முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளது.

மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வசதிக்காக ஆன்-லைன் மூலமாகவும் பாடம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்பட்டது. கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், பிற ஊழியர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று வருவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

dailythanthi