8-ம் வகுப்பு மாணவன் புகார்: மரம் வெட்டியவருக்கு 62 ஆயிரம் ரூபாய் அபராதம்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் அளித்த புகாரின் பேரில் மரத்தை வெட்டியவருக்கு,அம்மாநில வனத்துறை 62 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்ததுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரி கூறிஇருப்பதாவது:

தெலங்கானா மாநிலத்தில் மாநில அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக மாணவர்களை உள்ளடக்கிய பசுமை படைபிரிவுகளை பள்ளிகளில் உருவாக்க உத்தரவிட்டுள்ளது.இந்த பிரிவில் சைதாபாத் பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது வீ்ட்டிற்கு அருகே புதிதாக வீடு கட்டுவதற்காக சந்தோஷ்ரெட்டி என்பவர் முயற்சித்துள்ளார். அதற்காக அந்த இடத்தில் இருந்த 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரத்தை வெட்டி உள்ளார்.

இதனையறிந்த எட்டாம்வகுப்பு மாணவர் வனத்துறை அறிவித்திருந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு புகார் அளித்துள்ளார். அப்போது வெட்டப்பட்ட மரங்கள் வாகனங்களில் ஏற்றப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு மரம் வெட்டுவதற்குபயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இடத்தின் உரிமையாளர் சந்தோஷ்ரெட்டி மரத்தை வெட்டுவதற்கு உரிய அனுமதி கோரவில்லை என்பதை வனத்துறையினர்கண்டறிந்தனர். இதனையடுத்து அவருக்கு அபராத தொகையாக ரூ.62,075 -ஐ அபராதமாக விதித்தனர். அதுமட்டுமல்லாது தைரியமாகபுகார் அளித்த சிறுவனுக்கு வனத்துறை பாராட்டுதெரிவித்துள்ளது.

dinamalar