ரஷியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள்

ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்தது.

ஐதராபாத், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. அதே சமயத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. எனவே, வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகள் இறக்குமதி செய்யும் பணியும் நடந்து வருகிறது.

ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கருதப்படுகிறது. எனவே, இந்தியா மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கடந்த 1-ந் தேதி ரஷியாவில் இருந்து 1½ லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.

மத்திய மருந்துகள் ஆய்வுக்கூடம் அதற்கு ஒப்புதல் அளித்தது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ரூ.948 மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ந் தேதி, ஐதராபாத்தில் முதல் முறையாக ஒரு பயனாளிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தநிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது தொகுப்பு நேற்று இந்தியாவுக்கு வந்தது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில், 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருந்தன. விமானத்தில் இருந்து தடுப்பூசி பெட்டிகள் இறக்கப்படும் புகைப்படத்தை ஸ்புட்னிக்- வி இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிக்கோலே குடாஷேவ் கூறியதாவது:-

இந்த தடுப்பூசியின் செயல்திறன் உலகம் அறிந்ததுதான். புதிய உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் இது சிறப்பாக செயல்படும். சமீபத்தில் அந்த தடுப்பூசி முதல் முறையாக செலுத்தப்பட்ட நிலையில், இந்த தொகுப்பு உரிய நேரத்தில் வந்துள்ளது.

கூட்டு முயற்சிகள் மூலம் கொரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.