இலங்கைக்கு கடத்த முயன்ற 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

இலங்கைக்குப் படகு மூலம் கடத்த முயன்ற 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தல் கும்பல் 8 பேருக்கு 15 நாள் சிறைத் தண்டனை வழங்கி நாகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நாகை துறைமுகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கஞ்சா கடத்தவிருப்பதாகத் தனிப்படை பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நாகை கடற்கரை பகுதியில் நேற்று தனிப்படை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாகச் சிலர் சுவாமி படங்களைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு அதனை விற்பனை செய்வது போலச் சென்று கொண்டிருந்தனர். இதன் பின்னர் சந்தேகம் அடைந்த பொலிஸார் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த பொலிஸார் சுவாமி படங்களை ஆய்வு செய்த போது, அதனுள்ளே 90 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் நாகை பாப்பாகோவில் அந்தணப்பேட்டை ஆழியூர், சிக்கல், புதுப்பள்ளி, விழுந்தமாவடி, கீச்சாங்குப்பம், டி.ஆர்.பட்டினம், காரைக்காலை சேர்ந்த, வீரக்குமார், நிவாஸ், ஜெகபர்சாதிக், தியாகராஜன், சத்தியகீர்த்தி, குமார், முகேஷ், அருண் உள்ளிட்ட 8 பேர் என்பதும் கஞ்சாவைப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து 8 பேரைக் கைது செய்த தனிப்படை பொலிஸார் அவர்களை இன்று நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கஞ்சா கடத்திய குற்றத்திற்காக 8 பேரும் 15 நாள் சிறையில் அடைக்க நாகை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் இன்று திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

(நன்றி tamilwin)