வேகமெடுக்கும் கொரோனா- கேரளாவில் நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமல்

கொரோனா பரவல் அதிகம் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்து உள்ளது.

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

மாநிலம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 17,755 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 4,694 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று மாநில சுகாதாரதுறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் கேரளா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நாளை முதல் வழிபாட்டு தலங்களில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமணங்கள், இறுதி சடங்குகளிலும் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் கூறப் பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவல் அதிகம் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்து உள்ளது.

மேலும் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மாநாடுகள், பொதுக்கூட்டங்களை ஒத்தி வைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

இது தவிர மாநிலம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் நாளை முதல் ஆன்லைன் மூலம் விசாரணையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுபோல அனைத்து கோர்ட்டு நடவடிக்கைகளையும் ஆன்லைன் மூலம் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதே நேரம் கோர்ட்டுகளில் நடக்க வேண்டிய வழக்கு விசாரணையை கோர்ட்டு அறையில் நடத்த வேண்டுமா? அல்லது ஆன்லைனில் நடத்தலாமா? என்பதை நீதிபதி முடிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

கேரளாவில் நாளை முதல் அமலுக்கு வர உள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாதம் 11-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்து உள்ளது. அரசின் அறிவிப்புப்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை போலீசார் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

maalaimalar