தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா- மருத்துவமனைகளில் 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க அரசு உத்தரவு

சென்னையில் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 589-ல் இருந்து 596- ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 60 ஆயிரத்து 182- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 217- பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்றைக் கண்டறிய இன்று 15 ஆயிரத்து 953- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

லேசான அறிகுறிகள் இருந்தால் பாரசிட்டாமல், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கி தனிமைப்படுத்த வேண்டும் என்றும் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தினசரி கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

Malaimalar