இந்திய-ஜப்பான் ராணுவம் 2 வார கால பிரமாண்ட போர் பயிற்சி- ஜப்பானில் இன்று தொடங்குகிறது

ஜப்பானில் இந்திய-ஜப்பான் ராணுவங்கள் பங்கேற்கும் 2 வார கால பிரமாண்ட போர் பயிற்சி இன்று தொடங்குகிறது.

ஜப்பான் நாட்டின் ஷிகா மாகாணத்தில் கேம்ப் இமாசு பகுதியில் இந்திய-ஜப்பான் ராணுவங்கள் பிரமாண்ட ராணுவ போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.இதற்கு ‘தர்ம கார்டியன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மார்ச் 2-ந் தேதிவரை, 2 வார காலத்துக்கு இப்பயிற்சி நடக்கிறது.

தற்போதைய சர்வதேச சூழ்நிலையில், இந்தியாவும், ஜப்பானும் சந்திக்கும் பாதுகாப்பு சவால்களின் பின்னணியில், இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பயிற்சியில், இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவினரும், ஜப்பான் ராணுவத்தின் தரைப்படை பிரிவினரும் பங்கேற்கிறார்கள். இந்திய ராணுவத்தின் படைப்பிரிவு கடந்த 12-ந் தேதி அங்கு போய்ச் சேர்ந்து விட்டது.வனப்பகுதி, நகர்ப்பகுதி, சிறிய நகர்ப்பகுதி என பல இடங்களில் பயிற்சி நடக்கிறது.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய-ஜப்பான் கூட்டு ராணுவ போர் பயிற்சி இரு ராணுவமும் யுத்த உத்திகளை பகிர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும். தத்தமது அனுபவங்களையும், தொழில்நுட்ப அறிவையும் பகிர்ந்து கொள்ள பயன்படும்.உடல் தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கூட்டாக திட்டமிடல், கூட்டாக வியூகம் வகுத்தல் ஆகியவற்றில் ஈடுபட முடியும். மேலும், இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிப்பதுடன் இருதரப்பு உறவும் வலுப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

-dt