தொற்று குறித்து முன்கூட்டி எச்சரிக்கும் கருவி தேவை – இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ் பேட்டி

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். கரோனா தொற்றுக்குப்பின் அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.

மும்பையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் சுகாதாரம் தொடர்பான கொள்கைகளை விரைவுப்படுத்த கேட்ஸ் அறக்கட்டளை, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறது. இதில் வியக்கத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தட்டம்மை, குழந்தைகள் உயிரிழப்பு, பிரசவ கால உயிரிழப்பு போன்றவை எல்லாம் வெகுவாக குறைந்துள்ளன.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளதால், இந்தாண்டு சிறப்பான ஆண்டு. ஆதார் முறை, டிஜிட்டல் நிதி போன்றவை எல்லாம் கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் எப்படி பெரிதும் உதவின என்பதை மற்ற நாடுகளுக்கு எடுத்துக்கூற நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதே போன்ற முறைகளை மற்ற நாடுகளும் பின்பற்ற கேட்ஸ் அறக்கட்டளை போன்ற அமைப்புகளால் உதவ முடியும். இந்த சிறந்த முறைகளால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கம், உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்க முடியும்.

இந்தியாவில் ஏராளமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியது உலகில் மிகச் சிறந்த சாதனை. ஆனால் தொற்றுக்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாதிரிகள் மூலம்தான் நாம் தொற்று பாதிப்புகளை உணர முடியும். எனவே, நியாயமான விலையில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் கருவிகளை உருவாக்க வேண்டும். விரைவான பரிசோதனை, தடுப்பு மருந்து தயாரிக்க தயாராக வேண்டும். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.

 

 

-th