நிலவைத் தொடர்ந்து செப்.2ல் சூரியனுக்கு ஆதித்யா விண்கலத்தை செலுத்துகிறது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இஸ்ரோவின் நிலவுத் திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளது. இதையடுத்து அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இஸ்ரோ முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தை செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனர் நிலேஷ் எம்.தேசாய் கூறுகையில், ஆதித்யா-எல்1 தயார் நிலையில் உள்ளதாகவும், செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவ வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

ஆதித்யா விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் கடந்த 2020-ம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டது. இந்த விண்கலம், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை பெற முடியும்.

 

-dt