அயராத உழைப்பின் வழி உச்சத்தை தொட்ட குணா

மே தின சிறப்புக் கட்டுரை -இராகவன் கருப்பையா

சரியான இலக்கை குறிவைத்து அதற்குத் தேவையான உழைப்பை போட்டால் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார், பேராக், கோப்பெங் நகரைச் சேர்ந்த குணசேகரன் முனியாண்டி.

பள்ளிப் பருவத்தில் இருந்த போதே, பிற்காலத்தில் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் எனும் வேட்கையை வளர்த்துக் கொண்ட அவர் எஸ்.பி.எம். தேர்வு முடிந்த மறுகணமே அதற்கான முயற்சியில் இறங்கி தற்போது குறைந்தது 5 தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தோட்டத் தொழிலாளர்களான முனியாண்டி – நாகேஸ்வரி தம்பதியருக்கு 2ஆவது பிள்ளையாகப் பிறந்த குணா, தமது ஆரம்பக் கல்வியை கோப்பெங், கோத்தபாரு தோட்டத் தமிழ் பள்ளியில் நிறைவு செய்தார்.

பிறகு கோப்பெங் இடைநிலைப் பள்ளியில் 5ஆம் படிவம் வரையில் கல்வி பயின்ற அவர், ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் எனும் குறிக்கோலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பைத் தொடரவில்லை.

“நான் முதலாம் படிவத்தில் இருந்த காலத்திலிருந்தே வார இறுதி நாள்களில் கோப்பெங் சந்தையில் பகுதி நேர வேலை செய்தேன். அங்கு கோழி வியாபாரம் செய்த ஒரு பெரியவருக்கு உதவியாக பணிசெய்தேன்.”

“எண்ணம் போல் வாழ்க்கை, எனும் தன்முனைப்பு வாசகங்களை புத்தகங்களில் நான் படித்திருக்கிறேன். அதாவது எதைப் பற்றி அதிகமாக நாம் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோமோ அதன் தொடர்பான நிகழ்வுகள் நமக்கு நடப்பது உறுதி என்பதை வாழ்வில் நான் அனுபவப்பூர்வாகக் கண்ட ஒரு விஷயம்.”

“நீண்ட நாள்களாக சந்தையில் கோழி வியாபாரம் செய்து வந்த அந்த பெரியவர், ஒரு நாள் காலையில், ‘இந்தத் தொழிலை நீ எடுத்துச் செய்கிறாயா,’ என என்னிடம் கேட்ட போது, ஒரு கணம் நான் திகைத்துப்போய்விட்டேன். திடீரென அப்படி அவர் சொல்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.”

“எனினும், ‘கரும்புத் திண்ண கூலியா வேண்டும்,’ என்பதற்கு ஏற்ப உடனே அத்தொழிலை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு வயது 19. கோழி வியாபாரம்  நண்பகல் வரையில்தான். அதன் பிறகு மாலை வரையில்  ஏதாவது செய்யலாமே என்று யோசித்தேன்.”

“அந்த சமயத்தில் நாள் ஒன்றுக்கு சராசரி 20 கோழிகளும் வார இறுதி நாள்களில் ஏறத்தாழ 50 கோழிகளும் விற்பனையாகும்,” என்று கூறிய குணா, 2 ஆண்டுகள் கழித்து மீன் வளர்ப்புத் திட்டத்திலும் இறங்கினார்.

அவ்வட்டாரத்தில் மீன் வளர்ப்புத் தொழிலில் பல்லாண்டுகள் அனுபவம் கொண்ட நண்பர் ஜெகநாதன் தமக்கு ஊக்கமளித்ததாகத் கூறிய குணா, அவரைப் பின்பற்றி அதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

அரசாங்க அனுமதியுடன் அதே பகுதியில் உள்ள ஒரு பழையக் குட்டையில் மீன் வளர்க்கத் தொடங்கிய அவர், சன்னம் சன்னமாக குளங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நாளடைவில் மொத்தம் 10 மீன் குளங்களுக்கு உரிமையாளரானார்.

அந்த குளங்களில் ‘பத்தின்’ வகை மீன்களும் ‘கெளுத்தி’ மீன்களும் வளர்க்கப்படுவதாக விவரித்த குணா, ‘பத்தின்’ மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.’கெளுத்தி’ மீன்கள் கோப்பெங் சந்தை மட்டுமின்றி அருகில் உள்ள கம்பார் மற்றும் மாலிம் நாவார் சந்தைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த 2005ஆம் ஆண்டு வாக்கில் அந்த குளங்களுக்கு அருகிலேயே மாட்டுப் பண்ணை ஒன்றை அமைத்த குணா, கால்நடை வளர்ப்பிலும் தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

இதற்கிடையே தமது நீண்டநாள் கனவான கோழிப்பண்ணை ஒன்றையும் நிர்மாணித்த அவர் அத்தொழிலிலும் வெற்றிக் கொடி நாட்டி, கடுமையான உழைப்பின் பலனை அனுபவித்து வருகிறார்.

தற்போது தம்மிடம் உள்ள 3 பண்ணைகளிலும் 6,000 கோழிகளுக்கும் மேல் இருப்பதாகத் தெரிவித்த அவர், ‘கம்பத்துக் கோழி’ வளர்ப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி நிறைவான இலாபத்தை ஈட்டுகிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் இராஜேஸ்வரியை திருமணம் புரிந்த குணா, தற்போது 11 வயது மற்றும் 8 வயது, ஆகிய இரு குழந்தைகளுக்குத் தந்தையாவார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஆட்டுப் பண்ணை ஒன்றையும் நிறுவிய அவர், அதற்குத் தேவையான தீவனம் மற்றும் மருத்துவம் தொடர்பான விஷயங்களையும் சொந்தமாகவே கற்று அறிந்துள்ளார்.

“என் அண்ணன் மகேந்திரன் நீண்ட நாள்களாக சிங்கப்பூரில் உயரிய வருமானம் கொண்ட வேலை செய்து வந்தார். என்னைப் போல விவசாயத் துறையில் அவருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை.”

“எனினும் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் எனது வற்புறுத்தலின் பேரில் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு கோப்பெங் திரும்பிய அவர் தற்போது எனக்கு பக்கபலமாக இருந்து தொழில்களை கவனித்து வருகிறார்.”

சகோதரரின் வருகைக்குப் பிறகுதான் தமது தொழில்களை மேலும் விரிவாக்கம் செய்ய முடிந்தது என்று கூறும் 46 வயதுடைய குணா, தமது 19ஆவது வயதில் தொடங்கிய முதல் தொழிலான கோழி வியாபாரத்தை கோப்பெங் சந்தையில் இன்னமும் தொடர்ந்து செய்து வருகிறார்.

தமது கடுமையான உழைப்பினால் அதனையும் விரிவுபடுத்திய அவர், விடியற்காலையிலிருந்து நண்பகல் வரையில் தற்பொழுது நாள் ஒன்றுக்கு சராசரி 100 கோழிகளையும் வார இறுதி நாள்களில் சுமார் 200 கோழிகளையும் விற்பனை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிக்க வேண்டும் எனும் நேர்மறையான சிந்தனைகளுக்கு ஆழ்மனதில் உரமிட்டு, இரவு பகல் பாராமல் உழைத்தால் எவ்வகையிலும் வெற்றிகள் தானாகவே வந்து குவியும் என்பதற்கு குணாவின் சாதனைகள் நல்லதொரு எடுத்துக்காட்டு.