இராகவன் கருப்பையா- ஆளும் பி.கே.ஆர். கட்சியில் தற்போது நிலவும் தலைமைத்துவ போராட்டம் அக்கட்சியை என்றும் இல்லாத அளவுக்கு பிளவை ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பிரதமர் அன்வார் தனது மகள் நூருல் இஸாவை அடுத்தக் கட்டத்திற்கு தயார் செய்யும் வகையில் அவரை களமிறக்கியுள்ள விதம் கட்சி வட்டாரத்தில் மட்டுமின்றி தேசிய நிலையிலும் கூட பலருடைய புருவங்களை உயர்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக நூருல் செய்த அறிவிப்புத் தொடர்பாக அன்வார் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
தொடக்க காலத்திலிருந்தே அக்கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அதன் நடப்பு துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தற்போது ஓரங்கட்டப்படுவது அப்பட்டமாகவே தெரிகிறது.
அன்வார் சிறையில் இருந்த காலத்தில் அவருடைய மனைவி வான் அஸிஸா கட்சியின் தலைவராக இருந்த போதிலும் அதனை வலுப்படுத்துவதில் ரஃபிஸியும் அதன் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் ஆற்றிய பங்கு அளப்பரியது.
அஸ்மின் பிறகு பெர்சத்து கட்சியில் இணைந்துவிட்ட நிலையில் பி.கே.ஆர். கட்சிக்குத் தேவையான புள்ளி விவரங்களை துல்லியமாக சேகரிப்பதில் வல்லவரான ரஃபிஸி, தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
தேர்தல் காலங்களில் அவருடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு பெரும் கூட்டம் திரள்வதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த அளவுக்கு விஷயங்களை அவர் புட்டு புட்டு வைப்பார்.
எனினும் கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட அவருடைய போக்கில் சுணக்கம் காணப்பட்டது. ஏறக்குறைய சிறகொடிந்த பரவையாகவே இன்று வரையிலும் உள்ளார்.
சக்தி வாய்ந்த பதவியான உள்துறையமைச்சராக ரஃபிஸி நியமிக்கப்படுவார் என்று கணிக்கப்பட்ட வேளையில், கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கான போட்டியில் அவரிடம் தோல்வியுற்ற சைஃபுடினுக்கு அந்த அமைச்சு கொடுக்கப்பட்டது.
அது மட்டுமின்றி பொதுக் தேர்தலில் கெடா, பண்டார் பாரு கூலிம் தொகுதியில் சைஃபுடின் தோல்வியடைந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நடவடிக்கையானது ரஃபிஸியின் அசுர வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கானத் திட்டங்களில் ஒன்று என அப்போதே அரசியல் பார்வையாளர்கள் கணித்தனர். தற்போது அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அண்மைய வாரங்களாக நாடு தழுவிய நிலையில் நடைபெற்ற உள்கட்சித் தேர்தல்களில் ரஃபிஸியின் ஆதரவாளர்களில் நிறைய பேர்கள் தோல்வியடைந்தனர். திரைக்குப் பின்னால் நடந்த பேரங்களும் இதற்குக் காரணம் என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’.
தனது குடும்பத்தின் பாரம்பரியத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில் தோல்வியைத் தழுவிய நூருலை கட்சியில் முன்னிலைப்படுத்தும் நோக்கத்தில் களமிறக்கியுள்ள அன்வார், இன்னொரு தவணை பிரதமாக இருப்பாரா தெரியாது. சில தினங்களுக்கு முன் தனது பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ரஃபிஸியே இதனை கோடிக் காட்டியுள்ளார்.
அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் கட்சியை தொடர்ந்து வழி நடத்த தனது மகளை அன்வார் தயார் செய்கிறார் என்றே கருதப்படுகிறது.
அன்வார் குடும்ப அரசியல் நடத்துகிறார் என கடந்த 2018ஆம் ஆண்டே பரவலாக பேசப்பட்டது. அப்போது நடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரச மன்னிப்பின் வழி சிறையிலிருந்து விடுதலையான அவர், பிரதமர் பதவிக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் நெகிரி செம்பிலான், போட்டிக்சன் தொகுதி காலியாக்கப்பட்து.
இடைத் தேர்தலுக்கு வழிவகுக்கும் பொருட்டு அங்கு மக்கள் பிரதிநிதியாக இருந்த டேனியல் பாலகோபால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்குப் பதிலாக, சிலாங்கூர், பாண்டான் தொகுதியை வான் அஸிஸாவோ பெர்மாத்தாங் பாவ் தெகுதியை நூருலோ விட்டுக் கொடுத்து இடைத் தேர்தலுக்கு வழி வகுத்திருக்கலாமே என அரசியல் வட்டாரத்தில் அப்போது கேள்வி எழுந்தது.
எனவே இம்மாதம் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கான தேர்தல்களில் ரஃபிஸியின் அரசியல் ஆளுமை வெற்றி பெறுமா அல்லது அன்வாரின் குடும்ப அரசியல் அங்கீகரிக்கப்படுமா என்று தெரிந்துவிடும்.